தம்பியை இழந்த வடிவேலு; ஆறுதல் கூறிய அமைச்சர்!
உடல்நலக் குறைவால் உயிரிழந்த நடிகர் வடிவேலுவின் தம்பியின் உடலுக்கு அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
உடல் மொழியாலும் வசன உச்சரிப்பாலும் தனக்கென தனி நகைச்சுவை பாணியை உருவாக்கிக் கொண்ட வடிவேலுவுக்கு, மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் உள்ளனர். இவர்களில் இளைய தம்பி, ஜெகதீஸ்வரன். இவர் ‘மலைக்கோவில் தீபம்’, ‘காதல் அழிவதில்லை’ உள்பட்ட ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் பெரிய அளவுக்கு வாய்ப்பு கிடைக்காததால் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்துவந்தார். அவர், கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை காலமானார். அவரது உடல் மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
வடிவேலுவின் தம்பி மறைவுக்கு பல பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். வடிவேலு, அவரின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.