ஜிப்ரான், சுதா ரகுநாதன் - சிம்புதேவன்
ஜிப்ரான், சுதா ரகுநாதன் - சிம்புதேவன்Office

சுதா ரகுநாதன் குரலில் கானா; 3 மாதம் காத்திருந்த படக்குழு!

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘போட் - நெய்தல் கதை’ படத்தில் கானா பாடல் ஒன்றை பாடியுள்ளார் சுதா இரகுநாதன்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் போட் – நெய்தல் கதை. இப்படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.

முழுக்க முழுக்க கடலில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், படத்தில் இடம்பெறும் கானா பாடல் ஒன்றை பிரபல கர்நாடக இசைப்பாடகி பத்மபூஷன் சுதா இரகுநாதன் பாடியுள்ளார் என்ற தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்தின் நாயகனை நோக்கி நாயகி ஒரு கானா பாடல் பாடுவது போன்ற சூழல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கான பாடலை உருவாக்கிய பிறகு, இந்த பாடலை சுதா இரகுநாதன் பாடினால் நன்றாக இருக்கும் என்று இசையமைப்பாளரும், இயக்குநரும் விரும்பியுள்ளனர்.

அதன்படி, அவர்கள் பாடகி சுதா இரகுநாதனை அணுகி தங்களுடைய விருப்பத்தை தெரிவித்த போது, “எனக்காக ஒரு கானா பாடலை யோசித்தது ஆரோக்கியமான பரிசோதனை முயற்சி. நிச்சயம் நான் பாடுகிறேன். ஆனால், தற்போது லண்டனில் இருப்பதால், வருவதற்கு மூன்று மாதங்கள் ஆகும்” என்று சொல்லியிருக்கிறார்.

படக்குழுவும் அவருக்காக மூன்று மாதங்கள் காத்திருந்து. சுதா இரகுநாதன் சென்னை திரும்பியதும் பாடல் பதிவை நடத்தியுள்ளனர். வட சென்னையைச் சேர்ந்த கோல்ட் தேவராஜ் என்ற பாடலாசிரியர் எழுதிய கானா பாடலை பாடி முடித்த சுதா இரகுநாதன், பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் ‘போட் - நெய்தல் கதை’ திரைப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com