நடிகர் மாரிமுத்துவை ‘மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கி விட்டது' – வைரமுத்து! #RIPMarimuthu

மாரிமுத்து - வைரமுத்து
மாரிமுத்து - வைரமுத்து
Published on

‘சிகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கி விட்டது’ என நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. டப்பிங் முடித்து சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பியபோது காலை 8.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்து உயிரிழந்துள்ளார்.

மாரிமுத்து உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகை சேர்ந்த ஏரளமானவர்கள் வருகை தந்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்கள் நாசர், சரத்குமார், ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், சென்றாயன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேபோல், சுப.வீரபாண்டியனும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தநிலையில், நடிகர் மாரிமுத்து மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

”தம்பி மாரிமுத்துவின்

மரணச் செய்தி கேட்டு

என் உடம்பு ஒருகணம்

ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்

சென்று கொண்டிருந்தவனை

மரணத்தின் பள்ளத்தாக்கு

விழுங்கி விட்டது

என் கவிதைகளின்

உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து

நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்

திருமணம் செய்துவைத்தேன்

இன்று அவன்மீது

இறுதிப் பூக்கள்

விழுவது கண்டு

இதயம் உடைகிறேன்

குடும்பத்துக்கும்

கலை அன்பர்களுக்கும்

கண்ணீரைத் துடைத்துக்கொண்டே

ஆறுதல் சொல்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், “மாரிமுத்துவின் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடன் ஜீவா திரைப்படத்தில் வேலைப்பார்த்தேன். ரொம்ப அருமையான நடிகர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com