ரசவாதி நாவலுக்கும் என்னுடைய படத்திற்கும் சம்பந்தம் இல்லை! - இயக்குநர் சாந்த குமார்!
மெளன குரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்த குமார், தனது அடுத்த படத்துக்கு ரசவாதி என தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ரசவாதி – The Alchemist’ கிரைம் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா உட்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். சரவணன் இளவரசு, சிவகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
சாந்தகுமாரின் முந்தைய இரண்டு படங்களுமே தனித்துவமான திரைக்கதையைக் கொண்டிருந்ததால், ரசவாதி-யும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் கொடைக்கானல், மதுரை, கடலூர் மற்றும் பழனி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தலைப்பான ‘ரசவாதி – The Alchemist’, பிரேசில் எழுத்தாளர் பாலோ கொயலோ எழுதிய நாவலின் தலைப்பாகும். உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப்பெற்ற இந்த நாவலைத் தழுவி படம் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, ”ரசவாதி நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் சம்மந்தமில்லை. அந்தப் பெயரில் நாவல் இருப்பதை பிறகுதான் தெரிந்து கொண்டேன். இந்தக் கதைக்கு ரசவாதி என்றபெயர் பொருத்தமாக இருந்ததால் வைத்துள்ளேன். அது ஏன் என்பது படம் பார்க்கும்போது புரியும்.” அப்படத்தின் இயக்குநர் சாந்தகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.