
டியூட் திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை நீக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளிக்கு வெளியான டியூட் படத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் இடம்பெற்ற ’கருத்த மச்சான்’ என்ற பாடலும், பணக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த ’நூறு வருஷம்’ பாடலும் பயன்படுத்தப்பட்டு இருந்தன.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தன்னுடைய அனுமதியின்றி இந்த இரண்டு பாடல்களையும் பயன்படுத்தியதாகவும், இதனால் இந்த இரண்டு பாடல்களையும் படத்தில் இருந்து நீக்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் நேற்று முன்தினம் (நவ. 26) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, திரைப்படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது பிரபலமாகி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பாடல்களை மக்கள் இப்போது கேட்டு ரசிக்கின்றனர். இதனால், இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார்? என கேள்வி எழுப்பினார்.
பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இளையராஜா பாடல்களின் புனிதத்துக்கும், அவரது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி, டியூட் படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மனுவுக்கு பதிலளிக்கும்படி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, 2026 ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை நீக்க ஏதுவாக ஒருவார அவகாசம் வழங்க வேண்டும் என, பட நிறுவனம் தரப்பு கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.