நண்பேன்..டா - சால்வை சர்ச்சையில் மன்னிப்பு கேட்ட சிவக்குமார்!

சிவக்குமார்- கரீம்
சிவக்குமார்- கரீம்
Published on

புத்தக விழாவில் சால்வையைத் தூக்கி எறிந்த சர்ச்சையில் நடிகர் சிவக்குமார் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த ஞாயிறன்று பழ. கருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பழ.நெடுமாறன், நடிகர் சிவக்குமார் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

நிகழ்வு நடைபெற்ற கண்ணதாசன் அரங்கிலிருந்து சிவக்குமார் புறப்பட்டபோது, அவருக்கு முதியவர் ஒருவர் சால்வை அளிக்க முயன்றார். அதைக் கோபத்தோடு வாங்கி கீழே வீசினார், சிவக்குமார். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் நேற்றும் இன்றும் தீயாய்ப் பரவியது. 

பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியதால், சிவக்குமார் அந்த நபருடன் இணைந்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தன்னுடைய 50 வயது நண்பர் என்றும், அவரின் திருமணத்தையே தான் தான் நடத்திவைத்ததாகவும் சிவக்குமார் தெரிவித்தார். 

மேலும், சிவக்குமாருக்கு சால்வை பிடிக்காது என்பதை அறிந்தே தான் அதைக் கொண்டுவந்ததற்காக வருந்துவதாக சிவக்குமாரின் நண்பர் கரீம் சொல்ல, உடனே சிவக்குமாரும் பொது இடத்தில் தான் அப்படி வீசி எறிந்தது தவறுதான்; அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் காணொலியில் குறிப்பிட்டுள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com