தலைப்பைப் படித்துவிட்டு செய்தியாளர் சென்னை வெயிலால் ரொம்பத்தான் பாதிக்கப்பட்டிருப்பார் போல என்கிற அவசர முடிவுக்கு வரவேண்டாம்.
வணங்கான் பட ரிலீஸ் வரை எவருக்கும் அடங்கான் என்கிற மோடில் வலம் வந்த இயக்குநர் ‘சேது’ பாலா அப்படத்தின் பரிதாப தோல்விக்குப் பின் படு சாதுவாக மாறியிருப்பது பலருக்கும் தெரியாத செய்தி. அந்த மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் பாலாவுக்கு விஜய் சேதுபதி படம் ஒன்றை இயக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பு.
2025 ஜனவரி 10 அன்று ரிலீஸான பாலாவின் வணங்கான் வசூலில் தோல்வி அடைந்ததோடு மிகவும் பிற்போக்குத்தனமான படம் என்கிற பரவலான விமர்சனத்தையும் பெற்றது. இதனால் தனது அடுத்த படத்துக்கு வேறு எந்த ஹீரோவையும் அணுகாத பாலா ஒரு பிரபல தொழிலதிபரின் பேரனை ஹீரோவாக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்தப் பையனுக்காக கதை தயாரித்து முடித்து டெஸ்ட் ஷூட் செய்து பார்த்தபோது எங்கே தனக்கு சினிமாவில் எண்ட் கார்டு போட்டுவிடுவானோ என்கிற பயம் வந்துவிட்டது பாலாவுக்கு.
இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ், ஏ.எல். விஜய் இருவர் மூலமாக விஜய் சேதுபதிக்கு கதை சொல்ல அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறார் பாலா. கதை கேட்க சம்மதம் தெரிவித்த விஜய் சேதுபதி, ‘ நடிகர்கள்கிட்ட அடிச்சி வேலை வாங்குறது. ரூடா நடந்துக்கிறது மாதிரியான அவரோட சுபாவங்களை சுத்தமா மாத்திக்கணும். முதல் பட டைரக்டர் மாதிரி ஹம்பிளா சிம்பிளா நடந்துக்கணும்’ என்பது தொடங்கி ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் கதை கேட்டு ஓ.கே.வும் சொல்லிவிட்டதாக தகவல்.
டைட்டில் சரிதானான்னு இப்ப சொல்லுங்க.