துல்கர் சல்மானின் சொகுசு கார்கள் பறிமுதல்! - என்ன காரணம்?

துல்கர் சல்மான் வைத்துள்ள கார்கள்
துல்கர் சல்மான் வைத்துள்ள கார்கள்
Published on

நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்திய நிலையில், துல்கர் சல்மானின் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் உயர் ரக கார்களை இறக்குமதி செய்யும் முறைகேடுகளைக் கண்டறிய நாடு முழுவதும் ‘ஆபரேஷன் நம்கூர்’ என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கேரள மற்றும் லட்சத்தீவு சுங்க ஆணையரகத்தின் தலைமையில், கேரள மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், இன்றுகாலை, இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொச்சியின் பணம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மான், பிருத்விராஜ் மற்றும் எலம்குளத்தில் உள்ள மம்மூட்டி ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியது மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சோதனையில், சட்டவிரோதமாக பூட்டான் ராணுவத்தில் பயன்படுத்திய கார்களை வரி ஏய்ப்பு செய்து துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோர் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கொச்சியிலுள்ள இருவரது வீட்டிலும் கார் வாங்கியதற்கான ஆவணங்களையும், வரிதொடர்பான விஷயங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

பூட்டான் நாட்டின் வழியாக கார் இறக்குமதி செய்தததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து துல்கர் சல்மானின் பெயரில் உள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் உள்பட இரண்டு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கார் வாங்கியதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார் பிரியரான துல்கரிடம் ஏரளமான சொகுசு கார்கள் அவரிடம் உள்ளன. ரூ. 5.8 கோடி மதிப்பிலான ஃபெராரி கார் முதல் ரூ. 2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார் வரை அவரிடம் உள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com