வாழ்வில் வெற்றியடைய ஒரு செயலைsச் செய்வதற்கான காரணத்தை அறிய வேண்டியது அவசியம் என்கிறார் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை பிரியங்கா சோப்ரா.
அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் கேள்வி – பதில் அமர்வில், இளம்பெண் ஒருவர் அவரை நோக்கி, ”உங்களின் வாழ்க்கைப் பயணத்தில் அவர் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு பிரியங்கா சோப்ரா கூறியதாவது:
“ஒவ்வொரு நாளும், காலையில் படுக்கையிலிருந்து எழுவதற்கு நம்மைத் தூண்டும் காரணம் தான், நம் வாழ்வின் மையமாகும்.
இதுவரையிலான எனது வாழ்க்கைப் பயணத்தில், நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் நம்மை வேலைக்குச் செல்லத் தூண்டும் காரணத்தைக் கண்டறிவதுதான்.
வேலையை நாம் இயந்திரத்தைப் போல் ஆர்வமின்றி செய்யக்கூடாது. வெறுமனே ஒரு ஜோம்பியாகவோ, ரோபோவாகவோ நம் தினசரி வேலையை நாம் அணுகக்கூடாது.
நாம் செய்யும் வேலைகளில் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தேட வேண்டும். அதில் தேட சிரமமாக இருந்தால், வேறொன்றில் தேடுங்கள். ஆனால், தேடலை நிறுத்திவிடாதீர்கள்.
நமக்கு ஆர்வமுள்ள வேறு எதையாவது தேடுவது என்பது, நம் தொழில் வாழ்க்கையில் மாற்றம் கொள்ளவேண்டும் என்பதல்ல.
நாம் காலையில் கண் விழிக்கும்போது, வேலை, வாழ்க்கை, பொழுதுபோக்கு போன்ற ஏதாவது ஒன்றில் நம் மனம் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அந்தச் செயலைச் செய்வதற்கான காரணத்தை நாம் உணர வேண்டும். இதுதான் நம் வாழ்வில் வெற்றிக்கு வழிவகுக்கும்." என்றார் பிரியங்கா சோப்ரா.