இன்னும் ஒரு வாரத்தில், [19.07. 2026] தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில், அத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட சிலர் முடிவெடுத்ததை ஒட்டி ஏற்பட்ட மன உளைச்சல்தான் பாக்கியராஜின் மறைவுக்குக் காரணம் என்றொரு அதிர்ச்சி தகவல் நடமாடத்தொடங்கியுள்ளது.
இந்த அதிர்ச்சி செய்தியை அவரது வாரிசு இயக்குநர் பார்த்திபன் தனது எக்ஸ் தளப்பதிவில் மிக வெளிப்படையாகவே பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் சேரனுக்கும் பார்த்திபனுக்கு நடந்த கருத்து மோதலில்,…
பாக்யராஜ் சாருக்கு எழுத்தாளர்கள் சங்க தேர்தல் சற்று மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அறிந்தேன். ஏற்கனவே அவர் நடுநிலையாக/சிறப்பாக செயல்பட்டிருந்ததால் தலைமை பதவிக்கு தகுதியானவராக இருப்பினும்,தேர்தலை சந்திக்கும் போது address தேடி வரும் stress-ஐ சமாளிக்க முடியாமல் சற்றே சிரமப் பட்டதாக கேள்விப்பட்டேன். “இது ஒன்றும் பொது தேர்தல் அல்ல, போட்டியின்றி கௌரவமாக தேர்ந்தெடுத்தால் நீங்கள் தலைமைத் தாங்குங்கள் இல்லாவிட்டால் அமைதியாக உங்கள் எழுத்தை கவனியுங்கள்” என நான் அவரிடம் கூறுவதுண்டு. அவர் மறைவிற்கு பின் என்னிடம் சிலர் அவருக்கு பதிலாக அத்தலைவர் பதவிக்கோ செயலாளர் பதவிக்கோ போட்டியிட்டால் அமோக வெற்றி பெறலாம் காரணம் தற்போது தங்கள் மீது அபார அபிப்பிராயம் அனைவருக்கும் உள்ளது என்று கூறினார்கள். நான் மென்மையாக அதை மறுத்தேன். என் ஒவ்வொரு சொட்டு உண்மையான கண்ணீருக்கும் உள்நோக்கமான களங்கம் கற்பிக்கப்படும்.என் உணர்வுகள் முழுக்க முழுக்க உன்னதமானது அதை அனுதாபமாக்கி விற்று வெற்று வெற்றி பெற எனக்கு விருப்பமில்லை என்பதை அழுத்தமாக சொல்லி விட்டேன்.வெற்றி பெறும் அணிக்கு என் முன் கூட்டிய வாழ்த்துக்கள்…
என்று பார்த்திபன் பதிவிட அதற்கு சேரன் அளித்த பதிலில்,…
ஆம் சார்.. பாக்யராஜ் சார் விட்டுச்சென்ற இடம் வெற்றிடம் என்றால் அது அவர் இதுவரை கொடுத்த உழைப்புக்கு அர்த்தம் இல்லாமல் போகிறது... உங்களால் முடியாது என்பதை நாங்கள் உங்களிடம் பேசியபின் உணர்ந்தோம்... நீங்கள் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு இருந்தீர்கள்.. ஒரு அண்ணன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தம்பிகள் நாங்கள் நிதானமாக பாக்யராஜ் சாரின் ஆசையை நிறைவேற்ற இணைந்துவிட்டோம். திரு பாக்யராஜ் சார் அவர்களின் பெயரோடும் அவர் செலக்ட் பண்ணி வைத்திருந்த வேட்பாளர்களோடுதான் களமிறங்குகிறோம்.. நியாயமும் உண்மையும் என்றும் புறக்கணிக்க கூடாது..தண்டிக்கப்படவும் கூடாது.. அதை அனுமதிக்கவும் கூடாது.. எனவே எங்களை அரவணையுங்கள்.. அவரின் மனம் நிம்மதி அடைய உழைப்போம்.. நன்றி சார். என்று கூறியிருக்கிறார்.
தலைவர் பதவிக்கு தான் போட்டியிட முடிவெடுப்பதற்கு முன்பு பார்த்திபனைத்தான் போட்டியிடச் சொல்லி கேட்டார்களாம். அதற்கு அவர், என்னை எதிர்த்து யாரும் போட்டியிடாமல் நேரடியாக தலைவராக தேர்ந்தெடுக்க சம்மதித்தால் மட்டுமே போட்டியிடுவேன்’ என்று சொன்னதால் வேறு வழியின்றி சேரன் களத்தில் இறங்கினாராம்.