சக்தித் திருமகன் திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா?

சக்தித் திருமகன்
சக்தித் திருமகன்
Published on

சக்தித் திருமகன் கதை தன்னிடமிருந்து திருடப்பட்டதாக ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனியின் 25ஆவது படமாக உருவான சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியிருந்தார்.

இப்படம் கடந்த செப். 19 திரைக்கு வந்தது. கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்ததால் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

தற்போது, ஓடிடியில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் கதை தன்னிடமிருந்து திருடப்பட்டதாக முகநூலில் சுபாஸ் சுந்தர் என்பவர் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சுபாஸ் சுந்தரின் முகநூல் பதிவு:

சக்தித் திருமகன்- திருட்டுக் கதை

எந்த பதவியிலும் இல்லாமல் இந்தியாவையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு வில்லன் கேரக்டரை உருவாக்கி அதில் மாதவனை உருவகம் செய்து நான் 3 வருடங்களுக்கு முன்னர் எழுதி வைத்திருந்த காப்புரிமை வாங்கிய கதைதான் “தலைவன்”.

அதன் மையக்கருவையைக் (SNAP shot) குடுத்துள்ளேன், படித்துப் பாருங்கள். மாதவன் ஒரு இந்துத்துவ பிடிப்புள்ள வில்லன், நாட்டை சர்வாதிகாரத்துக்கு கொண்டு வரத் துடிப்பவன்.

ஹீரோவின் குடும்பம் அழிய காரணமாய் இருப்பான். அவனிடம் கூடவே ஹிரோ இருப்பான். ஹீரோவுக்கு பயிற்சி அளித்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். பின் ஒரு கட்டத்தில் ஹீரோ அவனுக்கு எதிராக திரும்புவான். ஹீரோ தான் சேர்த்த பணத்தை பிட்காயினாக மாற்றி அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி வில்லனை எதிர்க்கிறான்.

ஹீரோ மீது நிதி மோசடி புகாரை உருவாக்குகிறான். ஹீரோவை தீவிரவாதியாக சித்தரிக்கிறான். ஹீரோ வில்லனுடைய நிறுவங்களை நஷ்டத்துக்கு உள்ளாகுவது. ஹீரோவின் அம்மாவை விலைமாதுவாகச் சித்திரித்து சிறைக்கு அனுப்புவான் வில்லன் என் கதையில். இதிலும் அப்படி விலைமாதுவாகச் சித்தரித்திருப்பார்கள்.

என் கதையில் இறுதியில் வரும் வசனம் “உன்னுடைய மரணம் புரட்சியை விரும்பும் ஒவ்வொருவரையும் பயமுறுத்தும். மக்கள் கடுமையான கஷ்டம் அனுவவிப்பார்கள். குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள், உரிமைகளைப் பேச யோசிப்பார்கள், மக்களைச் சந்தோசப்படுத்தி ஓட்டு வாங்க வேண்டியதில்லை சர்வாதிகாரியாக நான் இருப்பேன்” என்பான் மாதவன்.

ஹீரோ என் கதையிலும் சாக மாட்டான். இதில் போலவே வில்லனை கொன்றுவிட்டு தப்பிப்பான். வெளியில் ராணுவம் நிற்க..

என் கதையை ட்ரீம் வாரியர்ஸுக்கு (Dream warriors) அனுப்பிய சான்று இருக்கிறது. சக்தித் திருமகனின் இயக்குநர் முதல் படம் அவர்களுக்குதான் செய்தார்... கதை இலாகா என்கிற பெயரில், புதியவர்களுக்கு உதவுகிறோம் என்று கதையை வாங்குகிறார்கள். அதன் பின் அது எங்கே யாருக்கு எந்த வடிவில் செல்கிறது என்பது யாருக்கு வெளிச்சம்?

சும்மா விடுவதாக இல்லை, சின்னச் சின்ன மாற்றங்களை செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்றால் எப்படி?

கதையைக் காப்புரிமை (copy rights of indiavil register) செய்து வைத்துள்ளேன். ஆவணங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. வருடம் 2022. தொடர்பான படங்களைப் பதிவிட்டுளேன். வழக்கு போடுவதாகவும் உள்ளேன்.

அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க உதவுங்கள். ஒருவரைப் போல் ஒருவர் இவ்வளவு பொருத்தங்களுடன் சிந்திக்க முடியாது. அப்படியே இருந்தாலும் முதலில் சிந்தித்து பதிவு செய்பவருக்கே உரிமை. ஒழுக்கத்தை, நேர்மையை போதிப்பதாக படம் இருப்பதைப் போல அதை எடுப்பவர்களும் இருந்தால் நன்று.” எனப் பதிவிட்டுள்ளார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இதுகுறித்து விஜய் ஆண்டனி மற்றும் ட்ரீம் வாரியர்ஸ் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com