
நைன் லைட்ஸ் நிறுவனத்தின் சார்பாக சுரேஷ் முத்து தயாரிப்பில், ஆர். கிஷோர் குமார் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு 11 வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஒரு பான் இந்தியா ஆக்சன், திரில்லர் திரைப்படம் ஆகும்.
அதிதி ரவி, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ. வெங்கடேஷ் உட்பட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில், முற்றிலும் மாறுபட்ட 11 அதிரடி பாத்திரங்களில் யோகி பாபு நடிக்கிறார்.
அறிமுக இயக்குநரான கிஷோர் குமார், இதற்கு முன்னர் இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் குறித்து இயக்குநர் கிஷோர் குமார் கூறியதாவது:
“பரபரப்பான காமெடி ஆக்சன் திரில்லரான இப்படத்தில் நாயகன் முதல் வில்லன் வரை மொத்தம் 11 பாத்திரங்களில் யோகி பாபு நடிக்கிறார். இதில் இரட்டையர் வேடங்களும் அடங்கும். இது மட்டுமில்லாது, பல்வேறு மொழிகளை பேசியும் நடிக்கிறார்.
ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குகிறது, அதன் பிளாக் பாக்ஸைத் தேடும் பயணம்தான் இந்தத் திரைப்படத்தின் கதை.” என்றார் கிஷோர்.
இப்படத்திற்கு ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார்; ‘தனி ஒருவன்’ புகழ் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பைக் கையாளுகிறார். படத்தின் கலை இயக்கத்திற்கு தாமு பொறுப்பேற்றுள்ளார்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் தொடர்கிறது.