ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகாவின் போலி வீடியோவை வெளியிட்டவர் கைது!

ராஷ்மிகா மந்தனாவின் டீஃப் பேக் வீடியோவை வெளியிட்ட ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை டெல்லி காவல் துறை இன்று கைது செய்துள்ளனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீஃப் பேக் வீடியோ சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகியது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனாவின் உருவப்படம் "மார்ஃபிங்' செய்யப்பட்டு பரப்பப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரித்தது.

டெல்லி காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு 4 பிரிவுகளின் கீழ் கடந்த நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மார்பிங் வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்த கணக்கின் இணையதள முகவரியை வழங்குமாறு டெல்லி காவல் துறை மெட்டா நிறுவனத்துக்கு அண்மையில் கடிதம் எழுதியது. தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரிடம் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

அவரது கணக்கில் இருந்து சமூக ஊடகங்களில் வீடியோ முதலில் பதிவேற்றப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நவம்பர் 10-ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 465 (போலி செய்ததற்கான தண்டனை) மற்றும் 469 (நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்திற்காக மோசடி செய்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66சி மற்றும் 66இ ஆகியவற்றின் கீழ் உளவுத் துறை இணைவு மற்றும் வியூக நடவடிக்கைகளின் படி டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்தது.

இருப்பினும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை டெல்லிக் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இவரே, ராஷ்மிகாவின் டீஃப் பேக் விடியோவை உருவாக்கியவர் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com