நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்திய காரணத்துக்காக நயன்தாராவுக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். இந்த நோட்டீசுக்கு நயன்தாரா, சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம். ‘நானும் ரௌடிதான்’ படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான காப்புரிமை காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன, என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் உண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மும்பையைச் சேர்ந்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், நயன்தாரா மீது உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய தனுஷ் தரப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனுஷின் குற்றச்சாட்டு தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.