படம் முடியும் வரை இருந்த அந்த பயம்! - மணிரத்னம்!

படம் முடியும் வரை இருந்த அந்த பயம்! - மணிரத்னம்!

என் படங்களை ‘மணிரத்னம் பாணி' என்று விளிப்பதை ஒருபோதும் நான் பெருமையாக எண்ணியது இல்லை. ஒவ்வொரு படத்தையும் புதிய ஒரு பாணியில் இயக்கவே விரும்பியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ‘பொன்னியின் செல்வன்' முற்றிலும் புதிய வகையான படம். இந்தப் படத்தில் எங்குமே மணிரத்னத்தைப் பார்க்க மாட்டீர்கள்' என்கிறார் தமிழ் சினிமாவின் பல வருடக் கனவுப்படைப்பை திரைக்குக் கொண்டு வந்திருக்கும் இயக்குநர் மணிரத்னம்.

ஊடகங்களுக்குப் பொதுவாகவே அதிகம் பேசாத மவுனரத்னம் இம்முறை இருவர், மூவர் என்று அழைத்து ஏறத்தாழ அனைத்து ஊடகங்களுக்கும் பேட்டி அருளினார். சரித்திரப் படத்தை இயக்கிய அனுபவத்தாலோ என்னவோ, வழக்கமாக கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் பதிலளிப்பவர் இம்முறை அனைத்துக் கேள்விகளுக்கும் விலாவாரியாக பதில் அளிக்கிறார்.

‘பொன்னியின் செல்வன்' திரைக்கு வருவதற்கு முன்வாரத்தில் ஒரு நாள் மாலை சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவருடன் உரையாடியதிலிருந்து...

‘கல்கியின் பொன்னியின் செல்வனை நான் வெறும் நாவல் என்று சொல்ல மாட்டேன். என்னைப் பொருத்தவரை அது அவர் செய்த மேஜிக்தான். அதனால்தான் 67 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அந்த மேஜிக் இன்றும் தமிழின் பெஸ்ட் செல்லராகவே இருக்கிறது.

நாவலில் ஒரு விஷயம் சொல்லிட்டு இருக்கும்போது, அங்கே வந்தியதேவனை விட்டுட்டு வந்துட்டேன்னு, கல்கி பின்னாடி போயிடுவார். அப்படி ரொம்பநாளா நான் விட்டு வைச்சிட்டு, இப்ப நான் கைபுடிச்சி அழைச்சு வந்திருக்கிற படம் இது.

சினிமாவில் காலடி எடுத்துவைத்த முதல் நாளிலிருந்து இந்தப்படம் ஒரு கனவு. அந்தக் கனவை திரைக்குக் கொண்டுவர முடிவு செய்தபோது என் முன்னால் சில கேள்விகள் இருந்தன. இந்த நாவல் தமிழில் அதிகம் பேரால், அதுவும் படித்தவர்கள் மீண்டும் மீண்டும் படித்த நாவல். அடுத்தடுத்து நடக்கப்போகும் நிகழ்வுகள் அத்துப்படி என்பதால் படமாக்கினால் சுவாரசியம் குறையாமல்

சொல்ல முடியுமா? அந்தக் கால சம்பாஷணைகள் இன்றைய ரசிகர்கள் மத்தியில் எடுபடுமா? இந்த நாவலை நிச்சயமா குறைந்தது பத்துப் பாகங்களாவாவது எடுக்க முடியும்... அதை இரண்டே பாகத்துக்குள் சுருக்க முடியுமா? இப்படிப் பல கேள்விகள்.

பத்துப் படங்களுக்கு பண்ற அளவுக்கு டிஸ்கஷனுக்கு மேல் டிஸ்கஷன்கள். ஒருவழியா இந்தக் கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிச்சபிறகுதான் ஒரு அசாத்திய நம்பிக்கை வந்தது. வரலாற்றுப்படம் ஆனா மாடர்னா இருக்கணும்னு முடிவு பண்ணி வேலையில இறங்கினோம்.

அப்படி ஒரு நம்பிக்கை வந்ததுக்குக் காரணமானவங்கன்னு இந்த சமயத்துல ரெண்டு பேரை கண்டிப்பா குறிப்பிட்டாகணும். முதலாமவர் ஜெயமோகன். எனக்கு ஜெயமோகன் ஒரு கையிலும், கல்கி ஒரு கையிலும் இருந்தது பெரிய பலம். எழுதின விதம், வசனம் எல்லாம் பழைய தமிழில் இருக்கணும். நாடகம் மாதிரி தெரியக் கூடாது. அலங்கார தமிழும் வேண்டாம். ‘மனோகரா' மாதிரியும் போயிட முடியாது. அது அந்த காலத்திற்கு  அருமையாக பொருந்தியது. அது தமிழ் பிரவாகமெடுத்த நேரம். இப்ப அது மாதிரி இருக்கக் கூடாது. ஜெயமோகன் எளிய, புரியக் கூடிய விதத்தில் வட சொற்களைக் கலக்காமல் வசனம் எழுதியிருக்கிறார். அது பேசுவதற்கு சுலபமாக இருந்தது.

இன்னொருத்தர் குமரவேல். இவருக்கு, கதையின் ஐந்து பாகத்தில் எந்த சந்தேகம் கேட்டாலும்.. எதைக் கேட்டாலும், எந்த பக்கத்தில் உள்ளதை கேட்டாலும் தெரியும். அவர் நாவலில் அத்துபடியாக இருந்தார். அவருடைய உதவி இந்தப் படத்திற்கு  முக்கியமானது.

என்னோட மற்ற எல்லாப் படங்களையும் விட இந்தப் படத்துக்கான நடிகர் தேர்வு ரொம்ப

சவாலா இருந்தது. ஒவ்வொரு கேரக்டருக்கும் நடிகர்களை முடிவு பண்ண ரொம்ப அவகாசம் தேவைப்பட்டது. அப்படி உள்ள வந்தவங்கதான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் எல்லாருமே.எனக்கு எப்பவுமே நடிகர்கள் கிட்ட நடிப்பை வாங்குறது பெரிய விஷயமே இல்லை. ஆனா இவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டத்தை வச்சி மேனேஜ் பண்ண முடியுமாங்குற பயம், படம் முடியும் வரை இருந்தது. இன்னொரு பக்கம் பார்ட்1, பார்ட்2 மாதிரி கொரோனா சீஸன் வேற. அதனால சிறப்பான நடிப்பை வாங்குறதுக்காக நிறைய ஆக்டிங் வொர்க்‌ஷாப் நடத்தினோம். வேற சில மெனக்கெடல்களும் இருந்தது.

ஷூட்டிங் டைம்ல எனக்கு ஷூட்டிங் மட்டும் ஒழுங்கா நல்லபடியா நடக்கணும். நடிகர்களை சரியான நேரத்துக்கு சாப்பிடக்கூட அனுமதிக்கமாட்டேன். மொத்தத்துல நான் அவங்களைப் பாடாய்ப் படுத்தினேன். பதிலுக்கு அவங்களும் என்னைப் பாடாய்ப்படுத்தினாங்க.

‘பொன்னியின் செல்வன்' பத்தி மட்டும்  பேசிட்டு தப்பிச்சுப் போய்டலாம்னு பார்த்தா ‘நாயகன் பார்ட் 2, வைரமுத்து ஏன் இந்தப் படத்துல இல்லை, கமலோட அடுத்த படம் எப்போன்னு ‘அவுட் ஆஃப் சிலபஸ்‘லயெல்லாம் கேள்வி கேக்குறீங்க.

வைரமுத்துவை வேணுமுன்னே தவிர்க்கலை. தமிழ் மொழி பலப்பல நூற்றாண்டுகள் பெருமை கொண்ட ஒரு கடல். இங்கே வைரமுத்துவைம் தாண்டி எத்தனையோ தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் இருக்கிறாங்க. சினிமாவுல புதுப்புது இயக்குநர்கள் வந்துக்கிட்டே இருக்கிறப்ப புதுப்புது கவிஞர்கள் வரக்கூடாதா? அப்படி அமைஞ்சதுதான் இந்தப் புதிய கவிஞர்கள்  கூட்டணி.

இன்னும் சொல்லப்போனா வைரமுத்துவோட நிறைய கவிதைகளை நானும் ரஹ்மானும் பாடல்களாக்கியிருக்கோம். அவரோட 30 வருஷங்கள் சேர்ந்து பணி செஞ்சிருக்கோம். அது போதாதா?

‘நாயகன் 2' இருக்குமான்னு தெரியலை. மறுபடியும் சேர்ந்து படம் பண்றது பத்தி நானும் கமலும் சிலமுறை பேசியிருக்கோம். கமல் கூட சேர்ந்து இன்னொரு படம் பண்றதா இருந்தா அது நாயகனை விட பல மடங்கு பெட்டரா இருக்கணும். அப்படி ஒரு கதை தோணுற வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.

அக்டோபர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com