திரிஷா, மன்சூர் அலிகான்
திரிஷா, மன்சூர் அலிகான்

’திரிஷாவே என்னை மன்னித்துவிடு’: மன்சூர் அலிகான் அறிக்கை!

நடிகை திரிஷாவைப் பற்றி ஆபாசமாகப் பேசி சர்ச்சையில் சிக்கிய மன்சூர் அலிகான், “எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் பேட்டி ஒன்றில் திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது கடும் கண்டத்துக்குள்ளானது. சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் மன்சூர் அலிகான் மீது 2 சட்டப்பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக ஆயிரம்விளக்கு மகளிர் காவல்நிலையத்தில் நேற்று ஆஜரான மன்சூர் அலிகான், “அந்த வீடியோவில் பேசியது நான்தான். நான் ஜாலியாக பேட்டி கொடுத்தேன். திரிஷா அதைத் தவறாகப் புரிந்துகொண்டார். எந்த உள் அர்த்தமும் வைத்து, நான் அப்படிப் பேசவில்லை. நான் பேசியதற்கு திரிஷா மனம் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நானும் மன வருத்தம் அடைகிறேன்.” என்று எழுத்துபூர்வமாக விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!

எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னைக் கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்கானோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையைத் தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.

காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம்தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!

சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சைக் கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது! ஜனநாயகத்தின் நான்காவது தூண், மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாகக் கேள்விகேட்க மறுக்கிறது. எனது இளமைக் காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கிலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கப்பூர்வமாக உழைக்க இறைவா சக்தியைக் கொடு!

என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயன உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணடிக்கப்பட்டு வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறக்கற்க சூரியன் மறையும்முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் ஜி.எஸ்.டி., எஸ்.டி., டோல்கேட், பெட்ரோல், கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்குக் கப்பம் கட்ட முடியும். அதானிந்தியா மார்பில் தவளும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியைக் கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்!

பெண்ணிலிருந்துதான் மனிதன் பிறக்கிறான் தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்குச் சேவை செய் என்றார் நபிகளார் அவர்கள். பெண்மை புனிதம் காரணத்தோடுதான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். என்னை ஈன்ற சபூராமான் பாம்புக்கடி, பூரான் தேள் கடித்து வருவோர்க்கு 8 வேளை தொழுது, ஓதி, ஊதி கிராம்பு நீர் கொடுத்து நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10 ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்.

எனது சக திரைநாயகி திரிஷாவே

என்னை மன்னித்துவிடு

இல்லறமாம் நல்லறத்தில் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்." என்று மன்சூர் அலிகானின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com