பெண்களின் பெருமைகளைப் பேசும் படங்களில் நடிக்க விரும்புகிறேன்! – ஜோதிகா
பெண்களின் பெருமைகளைப் பேசும் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருதுகளைப் பெற்றவர்களுக்கு சென்னையில் நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 4ஆம் தேதி தமிழக அரசு 2015 ஆம் ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் பட்டியலை வெளியிட்டது. இதில் மொத்தம் 39 விருதுகள் வழங்கப்பட்டன.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி கவனத்தை ஈர்த்த படங்கள் மற்றும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட்ட பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.
'36 வயதினிலே' திரைப்படத்திற்கு சிறந்த நடிகை உட்பட்ட ஏழு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் நடித்த ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதை நேரில் பெற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ சிறந்த படத்தில் நடித்ததற்கு சிறந்த விருது கிடைத்திருக்கிறது. '36 வயதினிலே' என் வாழ்நாளில் மற்ற முடியாத படம். பெண்களின் பெருமைகளை எடுத்துச்சொல்லும் இதுபோன்ற படங்களில் நடிக்க விரும்புகிறேன். அது கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.