ஆபரேஷன் ஃபெயிலியர்…ஆனால் பேஷண்ட் உசுரோடதான் இருக்கார் என்கிற கதையாக ஆட்சியை இழந்துவிட்டோம் ஆனால் காட்சியை இழக்கவில்லை என்று மார் தட்டிக்கொண்டிருக்கிறது முன்னாள் இளைய முதல்வர் உதயநிதியின் ரெட்ஜெயன்ட் நிறுவனம்.
சம்பவம் இதுதான். திமுக ஆட்சிக்கு டாட்டா காட்டப்பட்டுள்ள நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் தன் வாலை மெல்ல சுருட்டிக்கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு திரைப்படத்துறை முழுக்க உள்ளது. சினிமாக்கார அம்மக்களின் கருத்தை வழிமொழியும் விதமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் ரெட்ஜெயன்ட் நிறுவனத்தின் கொட்டம் அடக்கப்படும் என்று ஓபனாக பேட்டியெல்லாம் கொடுத்தார்.
இப்படிப்பட்ட சூழலில் தவெக ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் அடுத்தடுத்து இரண்டு படங்களை வெளியிட்டது. அதில் முதல் படம் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ‘கட்டா குஸ்தி 2’. இப்படம் சுமாராக இருந்தபோதும் நல்ல வசூல் கண்டது.
இதில் பெரும் உற்சாகமடைந்த ரெட்ஜெயன்ட் நிறுவனம் அடுத்து உடனே வெளியிட்ட படம் ‘இதயம் முரளி’. விமர்சகர்களால் வச்சு செய்யப்பட்ட இப்படத்தை கழகத்துக்கும் உதயநிதிக்கும் மிகவும் நெருக்கமானவரான ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கியிருந்தார்.
அதர்வா, கயாடு லோகர், ப்ரீத்தி முகுந்தன் தொடங்கி நட்சத்திரப்பட்டாளங்கள், காஸ்ட்லி டெக்னீஷியன்கள் பங்கேற்றிருந்த, சுமார் 35 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரை 10 கோடிக்கும் கீழே மட்டுமே வசூல் செய்துள்ள நிலையில் இப்படத்தையும் வெற்றிப்படமாகக் காட்டினால் நிறுவனத்துக்கு கெத்தாக இருக்குமே என்று நினைத்து படம் வெற்றி என்று புரளியைக் கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். நட்சத்திர ஹோட்டல்களில் பட நாயகிகள் பலர் புடைசூழ சக்சஸ் பார்ட்டிகளும் ஸ்டார்ட் ஆகியுள்ளன.
பராசக்தி டைரக்டரை பார்ட்டிக்கு கூப்டீங்களா பாஸ் ?