‘தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் இதைச் செய்யுங்கள்!’ -கமல்ஹாசன் அட்வைஸ்
‘தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல் இதைச் செய்யுங்கள்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ”மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை’ எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன்.
தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூடத் தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள். ‘செயலே விடுதலை’ என்பதை உணர்ந்து உங்கள் வாழ்விற்கு அர்த்தமும் அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள்.
‘உயிரின் இயல்பு ஆனந்தம்’ என்கிறார் தேவதேவன். நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாளில் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

