முற்றிலும் புதுமுகங்களை வைத்து 2009ல் ‘ரேனிகுண்டா’ படத்தின்மூலம் அதிரடி இயக்குநராக அறிமுகம் ஆனவர் பன்னீர் செல்வம். 17 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் பழைய பன்னீர் செல்வமாக ‘ரேனிகுண்டா பார்ட் 2வுடன் தற்போது ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறார்.
லிங்குசாமியின் இணை இயக்குநராக ‘ரன்’, ’சண்டக்கோழி’,’ஜி’, ‘பீமா’ பணியாற்றிய பன்னீர் செல்வம் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மகன் ஜானியை ஹீரோவாக அறிமுகம் செய்து ‘ரேன்குண்டா’ படத்தை இயக்கியிருந்தார். ஜானி உட்பட படத்தில் நடித்திருந்த அனைவரும் புதுமுகங்கள். படம் மாபெரும் வெற்றி. அடுத்து மீண்டும் ஜானியை வைத்தே ’18 வயசு’ என்கிற படத்தையும் விஜய் சேதுபதியை வைத்து ‘கருப்பன்’ என்கிற படத்தையும் இயக்கிய பன்னீருக்கு கடந்த 10 ஆண்டுகள் கடுமையான சோதனைக் காலங்கள்.
லிங்குசாமி நிறுவனத்துக்கு இயக்கிய பெயரிடப்படாத ஒரு படம், தனது மகனை வைத்து இயக்கிய ஐஸ்வர்யா முருகன்’ என்றொரு படம், புதுமுகங்களை வைத்து இயக்கிய இன்னொரு படம் என்று மூன்று படங்கள் ரிலீஸாகமுடியாமல் பெண்டிங்கில் கிடக்கின்றன.
இந்நிலையில் ‘ரேனிகுண்டா’ பார்ட் 2 வை கையிலெடுத்த அவருக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே படம் முடிந்து ரிலீஸுக்கும் தயாராகி, ஃபர்ஸ்ட் லுக்கை அவரது கருப்பன் நாயகன் விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார்.
முதல் பாகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் தப்பிப்பிழைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று போகிறதாம். அப்பட நடிகர்களில், கொரோனா சமயத்தில் உயிரிழந்த தீப்பெட்டி கணேசன் தவிர மற்ற அனைவரும் இந்த பார்ட்2 வில் இருக்கிறார்களாம்.
பழைய பன்னீர் செல்வமா வாங்க.