
2024ல் விஜய்யை வைத்து ‘கோட்’ ஹிட்டடித்த இயக்குநர் வெங்கட் பிரபு இன்றுவரை அடுத்த படம் இயக்கும் வாய்ப்பின்றி ’சும்மா’ இருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? ஆனால் நிஜநிலவரம் அதுதான். மட்டுமின்றி சில ஹீரோக்கள் அவரை தொடர்ந்து சுத்தலில் விட்டுக்கொண்டிருப்பது ‘என்ன கொடுமை சரவணா இது?’ ரகமேதான்.
விஜய், வெங்கட் பிரபு காம்போவின் ‘கோட்’ ’24 செப்டெம்பர் 5ம் தேதியன்று ரிலீஸானது. துவக்க தினங்களில் படம் சுமார் என்று தகவல்கள் நடமாடினாலும் வசூலில் குறையில்லை. மூன்று, நான்காவது வாரங்களில் படம் ஹிட் என்றே அறிவிக்கப்பட்டது.
இதே சமயம் ‘அமரன்’ ஹிட் அடித்த சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட் பிரபு படம் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ். இந்த காம்போவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால் சி.காவுக்கு 25 கோடியும் வெ.பிரபுவுக்கு 6 கோடியும் சம்பளம் என்று சொல்லப்பட்டது. இருவருக்கும் கணிசமான அட்வான்ஸும் கொடுக்கப்பட்டது.
ஆனால் பிரபு சொன்ன ஒன்றிரண்டு கதைகளில் சி.கா தொடர்ந்து கரெக்ஷன்கள் சொல்லிக்கொண்டே வந்ததால் படம் தள்ளிக்கொண்டே வந்தது. இந்த கேப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் ‘சேயோன்’ படத்துக்கு சிகாவை தள்ளிக்கொண்டுபோய்விட்டார்.
சி.கா தன்னைத் திட்டமிட்டுத் தவிர்க்கிறார் என்பதை சற்று தாமதமாகப் புரிந்துகொண்ட வெங்கட் பிரபு, 2கோடிக்கும் மேல் அட்வான்ஸ் வாங்கியிருந்த சத்யஜோதி நிறுவனத்துக்கு வேறு ஹீரோ யாரையாவது வைத்து படம் பண்ணும் எண்ணத்தில் முதலில் பிரதீப் ரங்கநாதனை அணுகியிருக்கிறார். அவரோ இரண்டு வருடங்களுக்கு பிசி என்று சொல்லிவிட அடுத்து ‘யூத்’ கென் கருணாஸை அணுகியிருக்கிறார். அந்த தம்பிப்பயலோ, ‘அண்ணே பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்க. என் டீமும் வெற்றிமாறன் சாரும் படிச்சிட்டு ஓ.கே. சொன்னா அப்புறம் பார்க்கலாம்’ என்று ஷாக் கொடுக்க, செய்வதறியாது திகைத்து நின்றிருக்கிறார் வெங்கட் பிரபு.
லட்டு மாதிரி நம்ம பிரேம்ஜியை கைல வச்சுக்கிட்டு என்னத்துக்கு வேற ஹீரோக்களை தேடுறீங்க பிரபுஜி ?