மனித மூளைத்தண்டின் 'கூகுள் மேப்' போன்ற முப்பரிமாண வரைபடத்தை சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த முப்பரிமாண வரைபடத்தைக் கொண்டு தனித்தனி செல்கள் வரை ஜும் செய்து பார்க்கலாம். இதன் மூலம் பல்வேறு நரம்பியல் பிரச்னைகளைக் கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மனிதர்களின் தானியங்கி செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் மனித மூளைத்தண்டுப் பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம், விழிப்புநிலை ஆகியவற்றை சீரான நிலையில் வைக்க உதவுகிறது.
'ஆங்கர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வரைபடம், மூளைத்தண்டிற்கான ஒரு 'கூகுள் மேப்' போலச் செயல்படுகிறது. நோயாளியின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் 'ஜூம்' செய்து, ஒரு தனிப்பட்ட செல் வரை சென்று பார்க்க முடியும்.
வெவ்வேறு வகையான செல்களைக் கண்டறிய எட்டு விதமான ரசாயனச் சாயங்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது ஒவ்வொரு செல்லிலும் உள்ள குறிப்பிட்ட புரதங்களை ஒளிரச் செய்து காட்டும்.
"மனிதனின் வாழ்நாளில் பல்வேறு நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட முழு மூளைகளை வரைபடமாக்குவதே எங்கள் இலக்கு" என்று இந்த மையத்தின் தலைவர் பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இந்த வரைபடம் மருத்துவ உலகில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.