சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், 'நலம் ஏஐ' என்ற செயலியை இன்று சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தினார்.
பொதுவாக அரசு மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற, நீண்ட நேரம் வரிசையில் நின்று சீட்டு வாங்க வேண்டும். இதனை எளிமையாக்கும் வகையில், இனி வீட்டிலிருந்தே முன்பதிவு செய்யும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய ஏஐ-யின் உதவியுடன் ஆன்லைனில் வீட்டிலிருந்தே பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். பின்னர், முன்பதிவு செய்தவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்படும். அந்த நேரத்தில் நோயாளிகள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இது இப்போதைக்கு 22 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
புறநோயாளிகள் பிரிவிற்கான முன்பதிவிற்கு 96192 22999 என்ற வாட்சாப் எண்ணிற்கு 'Hi' என்று செய்தி அனுப்பினால் போதும். தமிழகத்தில் நமக்கு அருகிலுள்ள மாநில அரசு மருத்துவமனைகளின் பட்டியல் வரும். அதில் உள்ள மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்து, எளிதாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும், மருத்துவரைச் சந்திப்பதற்கான முன்பதிவு வசதியும் சென்னை, இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், நெஞ்சகப் பிரிவில் தொடங்கப்பட்டுள்ளது.