
தமிழ் வானொலிகள் வாயிலாக உலகமெங்கும் அறியப்பட்ட சாத்தான்குளம் அப்துல்ஜப்பார் அவர்களின் நினைவலைகள் எனக்கும் இருக்கிறது ஒரு சரித்திரம் என்ற தலைப்பில் நூலாகி இருக்கின்றன. அவர் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் அவரது மகன் ஆசிப் மீரான். கிரிக்கெட் வர்ணனைகளின் அழகுக்காக என்றென்றும் அறியப்படுபவர் அப்துல் ஜப்பார். தான் எப்படி கிரிக்கெட் வர்ணனையாளராக ஆனேன் என அவர் எழுதி இருப்பதும், முதன் முதலாக வர்ணித்த ஒரு ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்திய தொடரும் மிக சுவாரசியம். ஆரம்பத்தில் தன் தந்தையைப் பற்றியும் தன் மகன், மகள் பற்றியும் அவர் எழுதிக்கொண்டே செல்வது இந்நூலை கீழே வைக்கவிடாமல் படிக்கச் செய்கிறது. 1950, ஜூன் 26, கொழும்பு வானொலியில் ஜப்பாரின் ஒலிபரப்பு வாழ்க்கை தொடங்கும் தினத்தில் நடந்தவற்றை எழுதி, பன்னிரெண்டில் தொடங்கி 82 வயது வரை தொடர்ந்தது என எழுதுகிறார். இக்காலகட்டத்தில் தனி மனிதர் ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் தாம் இவை என்றாலும் இந்த அனுபவங்கள் நம் பட்டறிவை விசாலமாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
எனக்கும் இருக்கிறது ஒரு சரித்திரம், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், வெளியீடு: கானல் அமீரகம், தமிழ் அலை,
பேச: 044- 24340200 விலை ரூ. 250