
காலம்
ஓடச்சொல்லும்போது
நடந்துகொண்டிருக்காதே
பாயச் சொல்லும்போது ஓடிக்கொண்டிருக்காதே
– என்கிற ராஜா சந்திரசேகர் இதுபோன்ற அழகான வரிகளைக் கொண்டு மழைக்காளி என்ற இந்த கவிதைத் தொகுப்பை அளித்திருக்கிறார்.
நீந்தி மகிழ
ஒரு நதி
செய்தேன்
தாகத்தில்
மொத்தத்தையும்
குடித்துவிட்டேன் – இது இன்னொரு கவிதை.
வரிசையில்
நிற்பவர்களுடன்
வரிசையும்
காத்திருக்கும்-
நின்று அசைபோட வைக்கும் வரிகள்.
வாழ்க்கையின் துளிகளை எளிமையான வரிகளாக்கி அட என யோசிக்க வைக்கும் துளிப்பாக்களையும் நீளமான உரையாடல்களாக நிற்கும் கவிதைகளையும் கலந்து இந்நூலில் பார்க்கமுடிகிறது. சொற்களைப் பிசைந்து அழுத்தமான உருவங்களாக உருவாக்கி கண்முன் நிறுத்துவதில் கவனம் கூட்டியிருக்கிறார் கவிஞர். சொல்லில் உருவான வானவில்கள் என இவற்றைச் சொல்லலாம்.
இத்தொகுப்பில் பல்வேறு கவிதைகளை காணொலியாகவும் வெளியிட்டு அவற்றைக் காண க்யூஆர் குறியீடுகளையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மழைக்காளி, ராஜா சந்திரசேகர், வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை -83. விலை ரூ.240