தேசியப்பள்ளியின் கதை!

தேசியப்பள்ளியின் கதை!

சுதந்தரப் போராட்டத்துக்கு காந்தி தலைமையேற்று, நாட்டில் தேசியப் பள்ளி இயக்கம் உருவானது 1920க்குப் பின்னால்தான். ஆனால் 1899லேயே மன்னார்குடியில் உள்ளூர்க்காரர்களால் ஒரு பள்ளி உருவாக்கப்பட்டு அதற்கு தேசியப்பள்ளி எனப் பெயர் வைத்-திருக்-கிறார்கள். அப்பள்ளியின் வரலாறையும் அதன் முன்னோடிகளையும் பற்றி விவரிக்கும் நூல்தான், ‘ஒரு பள்ளி வாழ்க்கை'.  இந்நூலில் மன்னார்குடியின் மூன்று முக்கிய திசைகாட்டிகளாக பின்லே பள்ளி,  தேசியப் பள்ளி, தூயவளனார் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் குறிப்பிடப்பட்டு அவற்றைப் பற்றி குறிப்புகளும் அவற்றின் முக்கியமான மூன்று தலைமையாசிரியர்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். மகாத்மா காந்தியிலிருந்து அண்ணாதுரை வரை பெரும் ஆளுமைகள் வருகை தந்த பள்ளியான தேசியப்பள்ளி பல்வேறு ஆளுமைகளை உருவாக்கிய வரலாறு கொண்டது. இந்தியா குடியரசு ஆனதற்குப் பிந்தைய காலகட்டத்தில் தேசியப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாக மாறியது. அதன் நிர்வாகத்தைக் கவனித்தவர் சுவாமிநாத உடையார். பள்ளிக்குதலைமையாசிரியராக வந்தவர் சீனிவாசன். இவர்கள் காலத்தில் தேசியப்பள்ளி பெரும் உயரங்களைத் தொட்டுள்ளது.  ஸ்ரீனிவாசனின் மகன் சேதுராமன் 1992-இல் இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் ஆனபோது காலத்தால் முந்தி சிந்தித்து பன்னிரெண்டாம் வகுப்பில் கணினி அறிவியல் பிரிவைக் கொண்டு வந்தது பெரிய முன்னெடுப்பு. இப்பள்ளியில் படித்து இன்று பல்வேறு துறைகளில் முன்னணியில் இருப்பவர்கள் தங்கள் அனுபவங்களை பேட்டியாகவும் கட்டுரைகளாகவும் இந்நூலில் பகிர்ந்துகொண்டுள்ளனர். நாட்டின் தலைமை தேர்தல் ஆணையாளராக இருந்த என். கோபாலசாமி கூட இப்பள்ளி மாணவர்தான்.  ஒருபள்ளியின் வரலாற்றைச் சொல்ல முனைந்து ஒரு சிறுநகரின் கல்விச்சாதனையை சொல்லி நிற்கிறது இந்நூல்

நூல் உருவாக்கத் திட்டம்: குலோபலியன் ட்ரஸ்ட், நூல் உருவாக்கம்: அருஞ்சொல் எடிட். வெளியீடு: குலோபலியன் ட்ரஸ்ட், குரோம்பேட்டை,சென்னை-44.பேசி: 9344912003 நன்கொடை: ரூ 500

வள்ளலார் வரலாறு!

இது வள்ளலாரின் 200 வது அவதார ஆண்டு விழா. மாநிலம்  முழுக்க 52 வாரங்கள் இவரது விழா நடக்க இருக்கிறது. இந்நிலையில் ஊரன் அடிகள் எழுதிய வள்ளலார் வரலாற்றுக் குறிப்புகள் என்ற நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளது முல்லை பதிப்பகம்.  எண்பது பக்கத்தில் சிறுநூல்தான். ஆனாலும் வள்ளலார் வாழ்வு பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கியது. வள்ளலார் வாழ்க்கையின் ஆதாரங்களாக அவரது தலைமாணக்கரான தொழுவூர் வேலாயுத முதலியார் சென்னை பிரம்மஞான சபைக்கு அளித்த வாக்குமூலம், தென்னார்க்காடு மாவட்ட கெசட்டில் ஆங்கிலேயே அதிகாரி எழுதிய குறிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடுவர். இவ்விரண்டும் ஆங்கிலம் மற்றும் தமிழ்வடிவில் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வள்ளலார் பற்றிய சுருக்கமான அதே சமயம் ஆதாரபூர்வ கையேடாக இந்நூலைக் கருதலாம்.

வள்ளலார் வரலாற்றுக் குறிப்புகள், ஊரன் அடிகள், வெளியீடு: முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை- 40 பேசி: 9840358301 விலை ரூ:60

பாரதி நினைவுநூல்!

பாரதி நினைவு நூற்றாண்டை ஒட்டி வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்  தொகுத்து வெளியிட்டிருக்கும் நூல்  மிகப்பிரமாண்டமாக வந்திருக்கிறது. சுமார் 750 பக்கங்கள். ராஜாஜியிலிருந்து ஆரம்பித்து சுமார் 100 தமிழ் ஆளுமைகள் பல்வேறு காலகட்டங்களில் பாரதி பற்றி எழுதியது உரையாற்றியது ஆகியவற்றைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார். அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் விரிவாக பாரதியைப் பற்றி ஆற்றியிருக்கும் உரைகள் கட்டுரை வடிவில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் இருவரும் பாரதியை வியப்போடு பார்த்தாலும் அணுகுமுறை மற்றவர்களிடமிருந்து கொள்கை அடிப்படையில் மாறுபடுவது சுவாரசியம். எஸ்.வையாபுரிப்பிள்ளை திருவனந்தபுரத்திலே பாரதியைக் கண்டதையும் அவரைப் பாடச்சொல்லிக்-கேட்டதையும் கட்டுரையாக வாசிக்கையில் சிலிர்க்கிறது. ‘இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்'- இது பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் பாரதி 1951-இல் திருச்சி வானொலியில் ஆற்றிய உரையில் வருகிற வரி. இது போல் பாரதியார் பற்றிய பல அரிய நினைவலைகள், இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் நிரம்பிய தொகுப்பு இது.

கரிசல் காட்டில் கவிதைச் சோலை பாரதி, தொகுப்பாசிரியர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், பொருநை- பொதிகை- கரிசல் கதை சொல்லி, கலைஞன் பதிப்பகம், 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை 17.

நிலத்துக்கு வேலி

தமிழர்கள் வேளாண்துறையில் முன்னோடிகள். அவர்கள் கடைபிடித்த நுட்பங்களுள் ஒன்று உயிர்வேலி. நிலத்தைச் சுற்றி அதற்கு பாதுகாப்பாக இருப்பதுடன் உழவர்களுக்கு வருமானத்தையும் ஈட்டித் தரும் வகையில் அமையக்கூடிய உயிர்வேலியில் பயன்படும் தாவரங்கள், மரவகைகள் பற்றியும் கூடுதலாக சில தகவல்களைத் தாங்கி வரும் இச்சிறுநூலை எழுதி உள்ளார் மரபு விதைகளின் காவலராக விளங்கிவரும் வானவன். தாழை, பனை, பழமரங்கள், கால்நடைத் தீவன மரங்கள், கிளுமரங்கள், கொடிக்காய்கறிகள் என பலவற்றை உயிர்வேலிகளாகப் பயன்படுத்தலாம் எனச் சொல்லும் நூலாசிரியர் அவற்றின் பலன்களையும் செழுமையாக எழுதி உள்ளார்.

உயிர்வேலி, வானவன், வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர்,சென்னை- 600011, பேசி: 9444640986 விலை ரூ 20.

Editorial

கூடுதல் வாக்குமூலம்

இந்த நூல் பெரும்பாலும் எல்லோருக்கும் ஏற்கெனவே தமிழில் அறிமுகமாகி இருக்கும்தான். 2004-இல் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல் இங்கே தமிழில் பரபரப்பாக வெளியானது. பெருநிறுவனங்களின் ஆலோசகர்கள் என்ற பெயரில் பொருளாதார அடியாட்களாக எப்படி ஆட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு களமிறக்கப்படுகிறார்கள்? உலக நாடுகளை எப்படி அமெரிக்க பெருநிறுவனங்களுக்காகவும் அமெரிக்க நலன்களுக்காகவும் வளைக்கிறார்கள் என்பதை தன் அனுபவங்களைக் கொண்டு ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய நூல் இது. தன் மனச்சாட்சியின் உறுத்தல் தாளமுடியாமல் எழுதப்பட்ட இந்தப் புத்தகமே அவர் கொல்லப்படுவதில் இருந்து அவரைக் காத்த காப்பீடு என்று இந்நூலின் முன்னுரையில் அவர் எழுதி இருக்கிறார். 2004-க்கு பிறகு 2016க்குப் பிறகு நடந்த பல விஷயங்களைப் பற்றியும் கூடுதலாக எழுதி இந்தப் புதிய பதிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பொருளாதார அடியாள்கள் முதலில் இறக்கி விடப்படுவார்கள்; அவர்களால் நாடுகளையோ அதன் அதிபர்களையோ வளைக்க முடியாத பட்சத்தில், அடுத்ததாக சிஐஏவின் ஜாக்கல்கள் என்ற குழு களமிறங்கி கொலை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும். அப்படி

செஷல்ஸ் தீவுகளில் நடவடிக்கையில் ஈடுபட்ட ஜாக்கல் ஒருவரின் வாக்குமூலமும் இந்த புதிய பகுதியில் உள்ளது. அமெரிக்காவை அடுத்து சீனா இப்போது வல்லரசாக ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்வது நாடுகளுக்கு கடன்களை வழங்கி அவற்றை தன் வசப்படுத்துவதையும் இப்பகுதியில் விவரித்துள்ளார். இப்படி எல்லாவற்றையும் அம்பலப்படுத்திய புத்தகத்தை எழுதிய இவரை பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் சந்தித்து பேட்டி எடுக்கிறான். அது முடிந்த சற்று நேரத்தில் கடுமையான உடல்நலப்பாதிப்புக்குள்ளாகி அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதையும் பெர்கின்ஸ் விவரிக்கிறார். ஒருவேளை தனக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறையும் அவர் விவரிக்கும்போது திடுக்கிடுகிறது. நூலின் இறுதியில் நமக்கு முக்கியமானது பிறரை நேசிப்பது என்று குறிப்பிடும் அவர் எல்லோரும் செய்யக்கூடிய முக்கியமான விஷயங்களாக பலவற்றைப் பட்டியலிட்டுள்ளார். மனச்சாட்சி உடைய அனைவரும் படிக்கவேண்டிய விஷயங்கள் அவை. இந்நூலை முறையான உரிமையுடன் பிஎஸ்வி குமாரசாமியின் மொழிபெயர்ப்பில் மஞ்சுள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வழக்கம்போல் குமாரசாமி மொழிபெயர்ப்புக்கு நியாயம் சேர்த்துள்ளார்.

ஒரு பொருளாதார அடியாளின் கூடுதல் வாக்குமூலம்- ஜான் பெர்கின்ஸ், தமிழில்: பிஎஸ்வி குமாரசாமி, வெளியீடு: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால்- 462003.

டிசம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com