கண்கவர் பறவைகள்

கண்கவர் பறவைகள்

இரைச்சலும் புழுதியும் நிறைந்த சென்னை நகரைத் தாண்டி தெற்கு நோக்கிச் செல்கையில் பொத்தேரி என்ற சிறு ரயில் நிலையம் வரும். இதன் அருகே உள்ளது கால்நடைப் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான காட்டுப்பாக்கம் கால்நடைப் பண்ணை. 700 ஏக்கர் பரப்பில் இருக்கும் இந்த வளாகத்தில் முதுகலை கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையம் இருக்கிறது.

இந்தப் பண்ணை ஓர் அழகான இடம். குறுங்காடுகள், ஏராளமான ஏரிகள் நிறைந்த இடம். எனவே பறவைகளுக்கும் சிறு விலங்குகளுக்கும் பஞ்சமே இருக்காது.

2016 &இல் இந்தப் பறவைகளைக் கணக்கிட ஒரு முயற்சி நடந்தது. அதில் பங்கேற்ற இரு பேராசிரியர்களுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. இங்குள்ள எல்லா பறவைகளையும் படமெடுத்து ஆவணப்படுத்தினால் என்ன? உடனே களமிறங்குகிறார்கள் உயிர்களின் மேல் இயற்கையாகவே நேசம் கொண்ட மனிதர்களான இவர்கள்.

ஓய்வு நேரங்களில் புதர்ப்பகுதிகளில் காமிராவுடன் அலைந்து திரிந்ததில் இந்த பண்ணையில் மட்டும் 140 வகை பறவைகள் இருப்பதை அறிகிறார்கள். அதுமட்டும் போதுமா? ஒவ்வொரு பறவையும் எப்படிக் குரலெழுப்பும் என்பதை அங்கேயே பதிவு செய்கிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமாகப் பறவைகள் காணப்படும் 100 இடங்களில் இவர்களின் ஆவணப்படுத்தல் முயற்சிக்குப் பின் இந்த பண்ணை 18வது இடத்தில் இருக்கிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களான சி.ஸ்ரீகுமார், ஆர்.வெங்கட ரமணன் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த நூல் பிரமிப்பை வரவழைக்கிறது. பறவை ஆர்வலர் எல்லோருக்கும் பெரும் ஆர்வத்தையும் மகிழ்வையும் உருவாக்க வல்லதாக இது இருக்கிறது.

அழகிய படங்களுடன் அருகிலேயே ஒரு க்யூ ஆர் கோடும் கொடுத்துள்ளனர். ஸ்கேன் செய்தால் அந்த பறவைகளின் ஓசையைக் கேட்டும் மகிழலாம்.

குயில்களில்தான் எத்தனை வகைகள்? சுடலைக் குயில், அக்கா குயில், சாம்பல் குயில்.

சில்லைகள் எத்தனை? புள்ளிச் சில்லை, சிவப்பு சில்லை, கருந்தலை சில்லை, வெண்முதுகுச்  சில்லை, தொண்டை சில்லை...

ஆந்தைகள்,மைனாக்கள், சிட்டுகள், நீர்க்குருவிகள், வாத்துகள்.. அடடா ஒரு மாபெரும் பறவைச்  சரணாலயமே அல்லவா இந்த பண்ணைக்குள் இருக்கிறது! வழுவழு தாளில் காபிடேபிள் புத்தக வடிவில் உருவாகி உள்ளது.

விலை: ரூ 3000 (மென் அட்டை), ரூ 3500

(கடின அட்டை)

Wings and songs, An illustrated book on the birds os postgraduate research institute in Animal sciences, kattupakkam, C.Sreekumar and R.Venkataramanan.

பேச: 9841906211,9443030707

வாழ்க்கையை மீட்டெடுத்தல்

ஆஷ்விட்ஸ் வதை முகாமில் தன் யூதப் பெற்றோர் விஷவாயுகொண்டு கொல்லப்பட்டதைக் கண்ணுற்றவர் ஈடித் எகர். அந்த வதைமுகாமிலிருந்து தப்பிப் பிழைத்து, பின்னர் பிரபல உளவியலாளர் ஆகிறார். தங்களுடைய மனச்சிறையில் சிக்கிக்கொண்டுள்ளவர்கள், அதிலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான உத்திகளைக் கண்டறியும் வகையில் பரிசு (The gift) என்னும் இந்நூலை எழுதி இருப்பதாக ஈடித் எகர் குறிப்பிடுகிறார். உதாரணத்துக்கு எமிலி என்ற பெண் கணவனால் விவாகரத்து செய்யப்படும் நிலையில் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகிறார். அந்நோய் குணமான நிலையில் கணவனும் விலகிய நிலையில் பெரும் மனக்குழப்பத்துடன் நூலாசிரியரைச் சந்திக்க அவர் உங்களையே நீங்கள் கண்ணாடியில் பார்த்து நேசியுங்கள் என்று வழிகாட்டுகிறார். இதுபோல் பக்கத்துக்குப் பக்கம் தன்னிடம் வந்தவர்களின் கதைகளைக் கூறி அவர்களுக்கு வழிகாட்டிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். இறுக்கமான மனங்களை நெகிழச் செய்ய இந்நூல் தலைப்பைப் போல் உண்மையிலேயே அருமையான பரிசாக அமைந்துள்ளது. பிஎஸ்வி குமாரசாமி அருமையாக மொழிபெயர்த்துள்ளார்.

பரிசு, ஈடித் எகர், தமிழில் பிஎஸ்வி குமாரசாமி, வெளியீடு: மஞ்சுள் பப்ளிஷர்ஸ்,போபால். விலை ரூ. 299.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com