சு. தமிழ்ச்செல்வி
சு. தமிழ்ச்செல்வி

ஒரே இரவில் தொண்ணூறு பக்கங்கள்!

நாவல் பிறந்த கதை

நான் பிறந்த கற்பகநாதர்குளம் ஒரு கடலோரக் கிராமம். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நெய்தலும் மருதமும் மயங்கும் நில அமைப்பு. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென தென்னந்தோப்புகள். இடையே சிறிய குளங்கள், குட்டைகள், நீரோடைகள். நொச்சிக்குத்தடிகளால், கிளுவை வேலிகளால் சூழப்பட்ட வீடுகள். படிப்படியாக காவிரி பொய்க்க எங்களூர் உழவர்கள் வலையெடுத்து மீன்பிடிக்கத் தொடங்கினார்கள். வேம்பு பூத்த முற்றங்களில் முன்னிரவுப் பொழுதுகளில் தமக்கையரிடம் கதைகேட்டு வளர்ந்தவள் நான். அக்கதைகளில் இருந்தோர் ஆகாயத்திலிருந்து இறங்கிவந்த தேவதைகள் அல்லர். அவை பெரும்பாலும் எங்களூர் பெண்களின் கதைகளாகவே இருந்தன. கொஞ்சம் வளர்ந்தேன். உயர்நிலைப் பள்ளிக்கு வேதாரண்யம் போனேன்.

மேல் நிலை படிக்க திருத்துறைப்பூண்டி போனேன். என் கதைகேட்கும் மனம் மட்டும் மாறவே இல்லை. நூலகங்களில் சாண்டில்யனிடம், சுஜாதாவிடம், பஷீரிடம், அம்பையிடம் கதைகள் கேட்டேன். கதை கேட்டு வளர்ந்த என்னை கதைகள் துரத்தியபடி இருந்தன. கூடப்படிப்பவர்களிடம் கதைகள் சொல்லத் தொடங்கியிருந்தேன். ஆனாலும் என்னிடம் அவர்கள் கவிதைகளை எதிர்பார்த்தார்கள். எதுகை மோனையோடு அவர்களிடம் காதல் கவிதைகளையும் லட்சியக் கவிதைகளையும் படித்துக்காட்டியபோது கைத்தட்டினார்கள்.

அந்தக் கைத்தட்டல் ஓசை தூங்கும் போதுகூட கனவிலும் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த இளம்பருவத்தில் அது எனக்குத் தேவைப்பட்டது. இந்நிலையில் எனக்குத் திருமணமாகியிருந்தது. எனது கணவர் கரிகாலன் ஒரு கவிஞர். அதுவரை நான் கவிதைகளென எழுதியவற்றை நினைத்துப் பார்த்தபோது வேடிக்கையாக இருந்தது. எனது கணவர் களம்புதிது இதழ் நடத்தினார். என்ன நினைத்தாரோ, திடீரென்று ஒரு நாள் ‘நீ ஏன் கவிதைகள் எழுதக்கூடாது?' என்னிடம் கேட்டார். எழுதிக் கொடுத்தால் களம்புதிது இதழில் பிரசுரிப்பதாகவும் கூறினார். எனக்குள்ளிருந்த கதை சொல்லியை யாரோ தட்டி விழிக்க வைத்தது போலிருந்தது.

பள்ளி இடைவேளை நேரம், பாடக்குறிப்பு நோட்டில் எழுதத் தொடங்கிவிட்டேன். என் ஆளுமையின் ஆணிவேர் என் அப்பா. யாரைப்பற்றி எழுதலாம் என்று யோசித்தபோது, அவர் ஆரம்ப புள்ளியாக தென்பட்டார்.

மனிதர்களை நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ பிரித்துப்பார்ப்பது தவறு. ரூமி கூறுகிறபடி சரி, தவறுகளுக்கிடையே மனிதர்கள் வாழ்கிறார்கள். என் அப்பாவும் அப்படிதான்.

என் அண்ணனும் அப்படிதான். குடும்ப அமைப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான உறவுச்சிக்கல்களை அதன் சூட்சுமங்களை தேடத் தொடங்கினேன். மங்கலான ஒரு சித்திரம் என் முன்னால் நிழலாடியது. ஓர் அடைமழை நாள். வீடுகளைவிட்டு வெளிவர முடியவில்லை. தொழிலுக்கு போகாமலும் எல்லோரும் முடங்கிக் கிடக்கிறார்கள். ஒரு தந்தையும் மகனும் மட்டும் பாலித்தீன் தாள்களை தலைக்கு போட்டுக்கொள்கிறார்கள். தமது மீன்பிடி கருவிகளுடன் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இக்காட்சியை சிறுகதையாக எழுத விரும்பினேன். களம்புதிது இதழில் என் கதையும் பெயரும் வரவேண்டும் என்னும் ஆசையில் எழுதத் தொடங்கினேன். இந்த ஒரு காட்சியை எழுதி முடித்தபோது அது இருபது பக்கங்களை தாண்டியிருந்தது. ஆனாலும் அந்த காட்சி மட்டுமே முடிவுக்கு வந்ததுபோல இருந்தது. கதையின் முடிவு அதில் இல்லை என்பதை உணர்ந்தேன். அது எங்கோ தொலைவில் இருப்பது போல தோன்றியது. அந்த முடிவை எட்ட இன்னும் நிறைய பக்கங்களை எழுதியாக வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். எங்கள் பகுதியின் மூத்த எழுத்தாளர் திரு வே.சபாநாயகம் அவர்களிடம் எழுதியவரைக் காட்டினேன்.

படித்து வியந்தார். ‘எழுதித் தேர்ந்தவருடைய படைப்பு போல் இருக்கிறதே. இதை ஒரு நாவலாக விரித்து எழுதுங்கள்!' என்றார். கணவரும் ஊக்கமளித்தார். மனசில் உற்சாகம் பெருக்கெடுத்தது. பசியும் தூக்கமும் காணாமல் போயிருந்தது. ஒரே இரவில் தொண்ணூறு பக்கங்கள் வரை எழுதினேன். இருபத்தேழு நாட்களில் முழு நாவலையும் எழுதி முடித்து பதிப்புக்கு கொடுத்தேன். சிறுகதையாக எழுதத் தொடங்கியது. நாவலாக உருப்பெற்றது. அதுதான் ‘மாணிக்கம்' . என் முதல் நாவல். நாவலை பிழை திருத்தம் செய்து பதிப்புக்கு கொடுத்தோம். அது எப்போது புத்தகமாக வரும் என்றெல்லாம் காத்திருக்கவில்லை. உடனடியாக அடுத்த நாவலை எழுத ஆரம்பித்துவிட்டேன். ‘அளம்' இரண்டாவது நாவல். மூன்று மாதங்களில் எழுதி முடித்திருந்தேன். மாணிக்கம் ஸ்நேகா வெளியீட்டிலும், அளம் மருதா பதிப்பக வெளியீட்டிலும், ஒரே நேரத்தில் வெளி வந்தன. முதன் முதலில் எனது எழுத்தை புத்தகமாக பார்த்த போது அடைந்த பெருமையையும் மகிழ்வையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.

எங்கோ தூரத்திலிருந்து, என் தோழிகளின் கைத்தட்டல் ஓசையை, மாலைநேரக் காற்று கொண்டுவந்திருந்தது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com