சாகித்ய அகாதெமியின் பாலபுரஸ்கர், யுவபுரஸ்கார் விருது அறிவிப்பு!

சாகித்ய அகாதெமியின் பாலபுரஸ்கர், யுவபுரஸ்கார் விருது அறிவிப்பு!

2023-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆதனின் பொம்மை’ என்ற புத்தகத்திற்காக எழுத்தாளர் உதய சங்கருக்கு பாலபுரஸ்கார் விருதும், ‘திருக்கார்த்தியல்’ என்ற புத்தகத்திற்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவபுரஸ்கார் விருதும் அறிவிக்கபட்டுள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரை உள்ளிட்டவைகளுக்கு சாகித்ய அகாதெமி விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2023 - ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய ‘திருக்கார்த்தியல்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் ராம் தங்கம் தினகரன், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். இப்போது முழுநேர எழுத்தாளராக தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு இவரது முதல் புத்தகமான ‘காந்திராமன்’ வெளிவந்தது. மேலும், ‘ஊர்சுற்றிப் பறவை’, ‘மீனவ வீரனுக்கு ஒரு கோவில்’என்ற புத்தங்களையும் எழுதியுள்ளார். நேஷனல் புக் ட்ரஸ்ட்டுக்காக இவர் சில சிறுவர் கதைகளையும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

பாலபுரஸ்கார் – உதய சங்கர்

அதேபோல், ’ஆதனின் பொம்மை’ என்ற புத்தகத்திற்காக எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளரான உதயசங்கர் இந்திய ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மேலும், இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார். 12 சிறுதகை தொகுப்புகளும், ஒரு குறுநாவலும், 5 கவிதை தொகுப்புகளும், 19 சிறார் இலக்கிய நூல்கள் என இவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலிருந்து தமிழுக்கு பல்வேறு புத்தகங்களை என மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com