எங்கட நினைப்பில் கடல் இல்லை

சிறப்பு பரிசு ரூ. 2500 பெறும் கதை
எங்கட நினைப்பில் கடல் இல்லை
Published on

எங்கட நினைப்பில் கடல் இல்லை தெரியுந்தானே?" என்றான் அவன், நான்காவது சுற்று மதுவிற்குப் பிறகு. "என்ட நினைப்பிலும். எங்கட அப்பனன்ட நினைப்பிலும். எங்கட தாத்தனன்ட நினைப்பிலும்"

அதுவரை ‘திருப்பத்தூர் லாரி டிரைவர்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தவனது தமிழ் உச்சரிப்பு இப்போது வேறு மாதிரி இருந்தது.

மேலே மரப்பொந்துகளில் பொதிந்து கொண்டிருந்த ஆந்தைகளின் அலறல் அக்காட்டில் எங்கெங்கோ சென்று எதிரொலித்து வலம் வந்தபடி இருந்தது. அருகே அருவி நீர் வழிந்தோடும் இரைச்சல். பதமான குளிர் உடலைத் தழுவி இருந்தது. பகல் வெயில் சுத்தமாகத் தெரியவில்லை. சற்று நேரத்துக்கு முன்னர் வரை வீழும் அந்த அருவியில் மூழ்கி குளித்துவிட்டு வந்தேன். 60 அடி உயரத்தில் இருந்து பொழிந்து கொண்டிருந்தது அருவி. கனத்த நீர் தலையில் விழுந்தபடி இருந்தது. பிறகு எதிரில் அருவி ஏற்படுத்தியிருந்த சிறுகுளம் போலான பள்ளத்தில் விழுந்து நீந்தி கொஞ்ச நேரம் ஊறிவிட்டு வந்தேன். பின்னர் நான் கரை ஏறிப்போய் ஒரு காட்டு மரத்துக்கு கீழிருந்த பாறையின் மேல் முன்னரே அங்கு வைத்துவிட்டு வந்திருந்த என் முதுகுமாட்டு சுமைப்பையைத் திறந்து ஒரு படுதாவை விரித்து அதில் கால் நீட்டி வெற்றுடம்புடன் அப்பாறையில் சரிவாகப் படுத்துக்கொண்டேன். அக்காட்டிலும் அவ்வருவிக்கரையிலும் அப்போது நான் மட்டுமே இருந்தேன். கொண்டு வந்திருந்த மது பாட்டிலைத் திறந்து கிளாசில் ஊற்றி மெதுவாக வானைப் பார்த்தபடி அவ்வப்போது எனக்குத் தோன்றிய பாடலை முணுமுணுத்தபடி கொஞ்சம் கொஞ்சமாக அருந்திக்கொண்டிருந்தேன். பிறகு தான் சில மணி நேரம் கழித்து இவன் வந்தான். வந்தவனும் அருவிக்குளியல் போட்டுவிட்டு கரை ஏறி என் பக்கமாக வந்தான். அவனும் மதுவருந்த தான் ஒதுங்கி இருக்கிறான் என்று புரிந்து கொண்டேன்.

நரசிம்ம பாலாஜி

"ஒரு ராயல் என்பீல்ட் பைக் பார்த்தேன். அது உங்களோடதா?"

"ஆம்"

"நம்ம லாரியும் அங்க தான் நிறுத்தி இருக்குது. திருப்பத்தூர்லேந்து சோடா பாட்டில் ஏத்திட்டு வந்த லாரி. சிக்கபல்லபூர்ல டெலிவரி கொடுத்துட்டு திரும்ப போயிட்டிருக்கேன். நீங்க?"

"நான் பெங்களூரு. சும்மா பைக்க எடுத்துட்டு ட்ரிப் வந்தேன். அப்பப்ப இப்படி கிளம்பி வருவேன்"

"ஓ.. சரி.. சரி"

எதிரே வேறொரு பாறை பக்கமாக அவன் கைப்பையுடன் ஒதுங்கிப் போனான். "சரக்கு சாப்பிடவா தலைவா? இங்க வாங்க. சேந்து சாப்பிடுவோம். திறந்து வச்சிருக்கேன் பாருங்க ஒரு ஃபுல்லு. ரெண்டு பேரும் சேந்து காலி பண்ணுவோம் வாங்க. உங்க பைய பிரிக்க வேணாம்" என்றேன்.

அவன் ஒரு மாதிரி கூசி நெளிந்தபடி பார்த்தான்.

"அட பரவாயில்லை வாங்க" என்றேன்.

இன்னொரு கிளாஸில் முதலிலேயே கலந்து நிரப்பி வைத்திருந்தேன். அதை எடுத்து அவன் கையில் கொடுத்து அவனை அமர வைத்தேன்.

நாங்கள் இருந்தது ஓர் உலர் இலையுதிர் காடு. ஆந்திர - தமிழக - கர்நாடக - எல்லையில் அமைந்த காப்புக் காடு. ஆந்திர மாநிலம் பலமனேருக்கும் தமிழகத்தின் குடியாத்தத்துக்கும் இடைப்பட்டு விரிந்திருக்கிறது, குட்டை மரங்கள் நிறைந்த இக்காடு. கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியாக இருக்கலாம். இந்தப் பருவகாலத்தில் குட்டை மரங்களின் கிளைகளில் எல்லாம் பசுமை ஏறி அலை அடித்துக்கொண்டிருந்தது. எந்நேரமும் மேகக்குவைகள் மென்சாரலை தூறிவிட்டுப் போகலாம் என்கிற அளவுக்கு அன்று வானிலை அமைந்திருந்தது. நான் பெங்களூருவில் இருந்து இரண்டரை மணிநேரம் பயணப்பட்டு வந்திருந்தேன். அக்காட்டுக்கு இடைப்பட்ட சாலையில் வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு மூன்று நான்கு கிலோமீட்டர் மலை ஏறி இந்த அருவிக்கரைக்கு வந்திருந்தேன்.

"திருப்பத்தூர்ன்னீங்க ஆனா உச்சரிப்பு வேற மாதிரி இருக்கே இப்போ?"

"ஹாஹா. கண்டுபிடிச்சுட்டீகள். இது உள்ளே போயிருக்கிறது இல்ல. இது உள்ள போயிட்டதென்டால் உள்ளே ஆழ அழுந்திக் கிடக்கறது எல்லாம் வெளியே வாரத் தானே செய்யும்.” என்றான் சிரித்தபடி மதுக்குவளையை தட்டிக் காட்டி. பிறகு தொடர்ந்தான். “திருப்பத்தூரென்டால் திருப்பத்தூர் தான்.. ஆனால் அகதி முகாம். மின்னூர் அகதி முகாம். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்களா? தெரிய இல்லை."

"சாரி. நான் கேள்விப்பட்டதில்லை"

நரசிம்ம பாலாஜி

"நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, பட்டதாரி ஆனது எல்லாம் அங்கிருந்து கொண்டு தான். இப்போ ஆகிபோச்சு எனக்கு வயசு நுப்பது."

"ஈழத்திலேந்து இங்கு வந்தவர்களா?"

"ஆமாம். எங்கட தாத்தனண்ட காலத்திலே. எனக்கு இங்கே தான். எனக்கு ஈழமும் தெரியாது. இலங்கையும் தெரியாது."

"ஓ.."

"எங்கட தாத்தன் தமிழகத்துக்கு வந்த மூத்த அகதிகளில ஒருவர். 83, 84 களில் உள்நாட்டுப் போர் மூண்ட போது ராமேஸ்வரம் மண்டபம் கேம்புக்கு என் அப்பா அத்தையுடன் வந்திருந்தது. சில வருடகாலம் அங்கே இருந்தோம். பிறகு திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டோம். அங்கே எங்கட தாத்தன் வயது மூப்பில் இறந்தும் போனார். பிறகு சென்னை காவங்கரை கேம்பிற்கு மாறி வந்தோம். அங்கே எங்கட அப்பன் அம்மையைச் சந்தித்தார். திருமணமும் முடிந்தது. பிறகு வேலை வாய்ப்புகள் தேடி திருப்பத்தூர் கேம்புக்கு வந்தோம். கடந்த 30-35 வருடங்களாக அங்கே தான். நான் அங்கு வந்து தான் பிறந்தனன். பி.ஏ. வரை படித்திருக்கிறன். குடியுரிமை இல்லாததால் அரசு வேலைக்கு வாய்ப்பில்லாமல் போகவே லாரியோட்டிக் கொண்டிருக்கிறன். டிப்பர் லாரி முதல் சின்ன யானை வரை என்று எல்லா சைசு லாரிகளையும் சீராக இயக்கி ஓட்டுவன்."

"லங்காக்கு திரும்புற நினைப்பு இன்னமும் இருக்கா உங்களுக்கு?"

"இல்லை திரும்பிப் போற நினைப்பு வாறதில்ல. ஏன்னா லங்காவும் இந்தியாவும் எங்களப் பொறுத்தவரை வேற வேற நிலம் இல்லை. ஒரே நிலம் தான். உங்களுக்கு தான் அது வேற நாடு. இது வேற நாடு. நாங்க எல்லாம் உங்களுக்கு அகதிகள். ஆனால் எங்களுக்கு அப்படி இல்ல. கடல் பிரிச்சுட்டா வேற நாடென்டு ஆகிடுமா சொல்லுங்கோ? எங்கட நினைப்பில் அந்தக் கடலே இல்லை. எங்கட தாத்தண்ட நினைப்பில் அது இருந்தது இல்லை. எங்கட அப்பனண்ட நினைப்பிலும். என் நினைப்பிலும் கூட இப்போ கடல் இல்லை"

உளறல் தான் என்றாலும் வேறொருவித உளறல் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

"யாழ்ப்பாணத்தில் இருந்து எங்கட தாத்தன் எங்களை நடத்தியே கூட்டி வந்திருக்கிறார் தெரியுமா? ஏனென்டால் அவர் நினைப்பில் அந்தக் கடலே இல்லை."

போதை உச்சிக்கு எறிவிட்டது போல.

"சொன்னால் நீங்கள் நம்பணும். உண்மையில் நடந்தது தான் அது. இயேசு நாதர் நீரில் நடந்தது போல எங்கட தாத்தன் அப்படியே எங்களை நடத்திக் கூட்டி வந்திருக்கிறாரென்டு சொல்லுவினம். ஐம்பது அறுவது பேர் அவரை நம்பி நடந்தே தனுஷ்கோடிக்கு வந்திருக்கிறாங்கள். பிறர் எல்லாம் நாவாய், படகு என்கிற கலங்களில் தொத்தி ஏறி தப்பிப்பிழைத்து வந்தவங்கள். நாங்கள் அப்படி அல்ல. சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அங்குமே யாரும் எங்கள நம்ப இல்ல. எங்கட தாத்தனுக்கு கடலே மறிக்காமல் வழி விட்டுட்டது. இங்கயிருந்து போய்டுங்கோ என்று சொல்லி விட்டுட்டது. அது விட்ட வழியில தான் இப்போது நாங்கள். நாங்கள் ஏன் திரும்பப் போக வேணும் ?

லோகேஷ் ரகுராமன் பெங்களூரில் பணிபுரிகிறார். திருவாரூர் மாவட்டம், நாடாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர். விஷ்ணு வந்தார், அரோமா, உளராதிருக்கும் வரை, பரத்தை மறைத்தது, அநிச்சயக் கரை என இதுவரை இவரது 5 சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘விஷ்ணு வந்தார்’ எனும் முதல் புத்தகத்திற்காக, தமிழில் 2024 ஆண்டு சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் வென்றவர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com