கட்டம்
பி.ஆர்.ராஜன்

கட்டம்

சந்துரு சிவராஜின் வீட்டுக்குச் சென்று சேர்ந்த போது காலை 11.30 ஆகி இருந்தது. நான்கு ஐந்து பேர் மட்டும் வட்டமாக அமர்ந்து சிவராஜின் தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். உறவினர்களாக இருக்கலாம். அவரை புகைப்படத்தில் பார்த்ததோடு சரி. இன்றைக்குத்தான் நேரில் பார்க்கிறான்.

‘அவர்தான் சிவராஜின் அப்பா'.உடன் வந்த மணிவண்ணனிடம் சொன்னான். மணிவண்னன் சந்துருவின் பள்ளித் தோழன். இருவரும் சிவராஜின் தந்தையிடம் சென்றபோது அவர் நாற்காலியிலிருந்து  எழுந்து கைகூப்பி வணங்கினார். சந்துருவும் வணக்கம் சொல்லிவிட்டு அவரது கைகளைப் பிடித்துக் கொண்டான்.

‘உட்காருங்க' என்று நாற்காலிகளைக் காட்டினார். ஷாமியானா நிழலில் இருந்த பிளாஸ்டிக் சேர்களில் இருவரும் அமர்ந்த போது. ‘அப்போ நாங்க கௌம்பறோம்ங்கண்ணா', என்றவாறு மற்றவர்கள் எழுந்து கொண்டார்கள். அவர்களை அனுப்பி வைத்தவர் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். உழைத்து உரமேறிய உடம்பு.

சிவராஜனுக்கே எப்படியும் 45 வயதுக்கு மேல் இருக்கும். இவருக்கு 70 இருக்கலாம்.

‘உடம்பு சரி இல்லாம இருந்தாருங்களா?' மணி கேட்டான்.

‘படுக்கைல எல்லாம் இல்லிங்க. காலைல எப்பவும்போல எந்திருச்சு குளிச்சுட்டு சாமி கும்பிட்டான். சாப்பிட்டுட்டு செருப்ப மாட்டிட்டு வெளில இறங்குனவன் அப்பிடியே திண்ணைய புடுச்சிட்டுகீழ சாஞ்சுட்டான். நான் தான் கைத்தாங்கலா தூக்கி திண்ணைல படுக்க வெச்சி ஒரு வாயிதண்ணிய பெருக்கி விட்டுட்டு சைக்கிள எடுத்துட்டு மெயின் ரோட்டுக்கு போயி ஆட்டோ புடுச்சிட்டுவந்தேன்.'

மெயின் ரோட்டுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் செல்லவேண்டி இருந்தது. சாலை வீட்டைச் சுற்றி வேறுவீடுகள் எதுவும் இல்லை. அரவமில்லாமல் ஒத்தையில் கிடந்தது.

‘வந்து பாத்தா வாயில நொற தள்ளிருச்சு. அவ ஆத்தா மேல படுத்து பொறண்டுகிட்டு கெடந்தா. டிரைவரும் நானும் தான் தூக்கிப் போட்டுட்டு ஆஸ்பத்திரி போனோம். டாக்டரு நாடிய பிடிச்சு பாத்துட்டு உதட்ட பிதுக்கிட்டாரு. உடனே தூக்கிட்டு வந்துட்டோம்.'

‘நேத்தே எல்லாம் முடுச்சிட்டீங்களா', ‘வேற என்ன பண்றதுங்க. வெளில இருந்தெல்லாம் யாரும் வரதுக்கு இல்ல. எல்லா ஒறம்பரையும் இந்த ஊரச்சுத்தி தான் . சாயந்தரமே எடுத்துட்டோம்.'

சந்துருவுக்கு சிவராஜன் தனக்கு எப்போதிருந்து அறிமுகம் என்ற எண்ணம் ஓடியது. படித்துமுடித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்தபோது கோயில் கோயிலாக ஏறி இறங்குவதையேவேலையாகக் கொண்டிருந்தான். சிறிய வயதிலிருந்தே சந்துருவுக்கு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு. ஒன்பது செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றினால் சீக்கிரம்வேலை கிடைக்கும் என்று ஏதோ பத்திரிகையில் படித்துவிட்டு வாராவாரம் அருகிலிருக்கும் அம்மன் கோயிலிலிருக்கும் துர்க்கை சிலைக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுவதை வாடிக்கையாக வைத்திருந்தான். அவனைத்தவிர துர்க்கைக்கு விளக்கேற்றுபவர்கள் அனைவரும்பெண்களாக இருப்பார்கள். அவர்களது கேலிததும்பும் பார்வையை பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாக விளக்கேற்றி வழிபடுவதை தொடர்ந்து வந்தான் சந்துரு.

விளக்கேற்ற தீப்பட்டி எடுத்து வராத ஒரு நாளில் தன்னைக் கடந்து சென்ற சிவராஜிடம் சார் தீப்பெட்டி இருக்கா எனக் கேட்டது தான் அவரிடம்பேசிய முதல் வார்த்தை. ‘இல்லீங்களே ஏனுங்க‘, என்றவரிடம் கையிலிருந்த நெய் நிரம்பிய எலுமிச்சம் பழத்தைக்காட்டி ‘விளக்கேத்தணுங்க', என்ற போதுவாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தார்.

‘இதெல்லாம் பொம்பளைங்க செய்யவேண்டியதுங்க', என்றார். சந்துருவுக்கு சுருக்கென்றது. கோவில் விளக்கில் எலுமிச்சம்பழ தீபத்தை ஏற்றி சாமி கும்பிட்ட பிறகு சிவராஜைத் தேட அவர் ஒரு தூணில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தார்.

அருகில் சென்று அமர்ந்தவுடன் சினேகமாக சிரித்தார். சந்தனம் குங்குமம் வைத்த மேலேறியநெற்றி. சிரித்த முகம். வெள்ளை வேட்டி வெள்ளை அரைக்கை சட்டை. சந்துருவும் சிரித்தான்.

‘எலுமிச்சம்பழத்துல எதுக்கு வௌக்குபோடறாங்கன்னு தெரியுமா?', என்றார்.

‘தெரிலைங்க, ஆனா ஒரு புத்தகத்துல படிச்சேன். வேலை கெடைக்கறதுல தடை இருந்தாஅது சரி ஆகும்னு. இதோட 5 வாரம் ஆச்சு' என்றான்.

‘இல்லீங்க, ராகு தோஷம் இருக்குற பொண்ணுங்க ராகு காலத்துல துர்க்கைக்கு எலுமிச்சம்பழத்தில விளக்கேத்துனா சீக்கிரம் அந்த தோஷம் விலகும்', என்று சொன்னதைக் கேட்ட சந்துரு புன்னகைத்து வைத்தான்.

‘என்ன சிரிக்கறீங்க. ஜாதகம் பார்க்கறது தான் என்தொழில்', என்றவுடன் அவருடனான உரையாடல் ஆன்மீகம், ஜோசியம் என நீண்டது. இருவருக்கும் சுமார் 15வயதுகள் வித்தியாசம் இருந்தாலும் ஆன்மீகமும் ஜோசியமும் அவர்களை இணைக்கும் புள்ளியானது.

மறுநாளே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சிவராஜின் அலுவலகத்துக்கு சந்துரு சென்றான். அவர் சந்துருவின் ஜாதகத்தைக் கணித்து, சில பரிகாரங்களைச் சொல்ல அதன்படிசந்துரு கோவில் குளங்களுக்கு சென்று வந்தான்.

சிவராஜ் 10 வரை தான் படித்ததாகச் சொன்னபோது சந்துருவுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனதுவீட்டின் அருகில் இருந்த ஒரு சாமியார் மூலம் ஜாதகம் கணிக்கும் தொழிலைத்  தெரிந்து கொண்டதாக வும் பிறகு அதில் ஆர்வம் ஏற்பட்டதால் தானாக தேடிச் சென்று ஜோசியம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். சந்துரு நிறைய ஜோசியர்களை சந்தித்திருந்தாலும், சிவராஜ், மற்றவர்களைப் போல பணம் பறிக்கும் வகையிலான பரிகாரங்களைச் சொல்லாமல் கோவில் குளங்களுக்கு செல்லச்சொல்வதே அவனுக்கு ஆறுதலாக இருந்தது. சந்துருவுக்குள் இருந்த ஆன்மீக நாட்டம் சிவராஜுடன் அவனை ஒன்றச் செய்திருந்தது.

இந்தச் சமயத்தில் தான் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த சந்துரு அரசுப் போட்டித்தேர்வு எழுத இருக்கும் சங்கதியை சிவராஜிடம்சொன்ன போது அவனை திருவெண்காடு புதன் கோவிலுக்கும், மதுரை சொக்கநாதர் கோவிலுக்கும், சென்று சில பரிகாரங்களைச் செய்யச் சொன்னார். போட்டித் தேர்வில் தான்வெற்றிபெற்று அரசுப்பணியில் அமர்ந்ததற்கு சிவராஜின் பரிகாரங்கள் தான் என்பதைமுழுமையாக நம்பத் துவங்கினான் சந்துரு. அதன்பிறகு வருடம் ஒருமுறை அவரை அழைத்துக்கொண்டு கோவில் குளங்களுக்கு சென்று பரிகார பூஜைகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டான். அவனது குடும்பவிழாக்கள் எதுவும் சிவராஜின் முன்னிலையின்றி நடபெறாது என்ற அளவில் இருவரும் ஒன்றிப்போனார்கள். ஜோசியத்தைத்தாண்டி குடும்ப விவகாரங்களையும் தனிப்பட்ட பிரச்சனைகளையும் பேசும் அளவுக்கு அவர்கள் இருவருக்குள்ளும் நட்பு வளர்ந்திருந்தது.

சிவராஜ் கடைசி வரையில் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒருமுறை இது குறித்து அவரிடம்கேட்ட போது தனக்கு திருமண யோகம் இல்லை என்றும் கடைசி வரை பிரம்மச்சாரி யாகவே இருந்துவிடுவது தான் தனக்கு வாய்க்கப்பட்ட விதி எனவும் சொல்லிவிட்டார். நீங்க கல்யாணம் பண்ணிக்கலாமே என்று இவன் அழுத்தம் கொடுத்தபோது ‘உங்க பிரச்சனையவே நான் தான் தீக்குறேன். எனக்கு நீங்க ஜோசியம் சொல்றீங்களா?' என முகத்திலடித்தாற் போல சொன்ன பிறகு அதைக்குறித்து மீண்டும் சந்துரு சிவராஜிடம் விவாதிக்க விரும்பவில்லை.

சிவராஜிடம் அவன் கண்டுகொண்ட ஒரே கெட்டபழக்கம் அது மட்டும் தான். ஈகோ. அதில் சிறு கீறல் விழுவதைக்கூட எப்போதும் சிவராஜ் அனுமதித்தது இல்லை. அவரிடம் பரிகார ஆலோசனை பெற்றவர்கள் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குதீர்வு ஏற்பட்டதாக அவரிடம் சொன்னால்அவருடைய பரிகார முறைகளின் மகாத்மியத்தை சிலாகிக்க ஆரம்பித்து விடுவார். அதைப்போலவேஅவரிடம் ஆலோசனை பெற்றவர்கள் பிரச்சனை தீர்ந்த பிறகு அது குறித்து அவரிடம் நன்றிதெரிவிக்காவிட்டால் அதன் பிறகு அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஜோசியம் பார்க்கமறுத்துவிடுவார். தன்னுடைய ஜோதிட அறிவைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்துவிட்டு நன்றி மறந்தவர்கள் எனத் திட்டித் தீர்ப்பார். அதைத் தவிர சிவராஜிடம் சந்துருவுக்கு புகார்கள் எதுவுமில்லை.

சென்ற மாதம் ஊருக்கு வந்திருந்த போது சிவராஜை சந்துரு பார்த்துச்சென்றிருந்தான். அவரது உடல்நிலையில்அவனுக்கு எந்தவிதமான மாற்றங்களும் தெரியவில்லை. அதே உற்சாகத் துடன்இருந்தார். அவருக்கு பீடி சிகரெட்டோ அல்லது மது போன்ற பழக்கங்களோ சுத்தமாக இல்லை. கட்டுப்பாடான உணவுப்பழக்கம், அதிகாலை நேர நடைப்பயிற்சி எனகட்டுசெட்டாக வாழ்பவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்பதை அவனால் நம்பமுடியவில்லை. அவனுக்கு குழப்பமாக இருந்தது.

‘சந்துரு.. அய்யா என்னமோ கேக்கறாரு பாரு', என்று மணி தன் தொடையைத் தட்டிய பிறகுதான் சந்துருவுக்கு சுய நினைவு வந்தது.

‘சொல்லுங்க ஐயா', என்றான் ‘தம்பி நீங்க யாருன்னு சொல்லலியே', ‘நானு சிவராஜோட பிரண்டுங்க, பேரு சந்திரசேகரன். இன்கம் டேக்ஸ் டிபார்ட்மெண்ட்ல அசிஸ்டண்ட் கமிஷனரா மும்பைல இருக்கேன்.'

சந்துரு சொல்லி முடித்தவுடன் படாரென்று உட்கார்ந்திருந்த சேரை உதைத்துவிட்டு எழுந்தவர் சந்துருவின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டு கதறத் தொடங்கியதைப் பார்த்த அவனுக்கும்கண்கள் கலங்கின.

‘தம்பி, நீங்க தானா அது. எனக்கு தெரில தம்பி. நேத்தே வருவீங்கன்னு எதிர்பார்த்தோம் நீங்க வரலியே. உங்கள பத்தி நெறையா சொல்லி இருக்கானே, இப்பிடிப் பண்ணீட்டானே தம்பி, உள்ள வாங்க', என்று கையைப் பிடித்து தரதர வென உள் அறைக்கு இழுத்துச்சென்றார். அங்கு கட்டிலில் சோர்ந்து போய் படுத்துக்கிடந்த சிவராஜின் அம்மாவை கட்டிப்பிடித்தபடி சிவராஜின் தங்கை கிடந்தாள். சந்துரு அவர்களைப் பார்த்தவுடன் வாய்விட்டுஅழத்துவங்கிவிட்டான்.

‘அடியே .. அவரு வந்திருக்காருடி. உன்புள்ளையோட பிரண்டு பாருடி' என பெரியவர் கதறவும் படுத்துக்கிடந்த அம்மா எழுந்து சந்துருவை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

‘இப்பிடி பண்ணிட்டானே பாவிமகன். ஊருக்கெல்லாம் பரிகாரம் சொன்னவன் இவ்வளவு கோழையா இருந்திருக்கானே.. தொங்கிட்டானே தொங்கிட்டானே. இந்தக் கையால தான அந்தநாசமாப்போன கயித்த அறுத்தேன்', என்றவாறு கதறிச் சரிந்த போது சந்துருவுக்கு சப்த நாடியும்ஒடுங்கி விட்டது. அவனது அழுகை சட்டென நின்றுவிட்டது.

‘என்னம்மா சொல்றீங்க', ‘ஆமாந் தம்பி. அவனுக்கு நெஞ்செல்லாம்அடைக்கல. பாவிப்பய 45 வயசில பண்ணுற காரியமா இது. ஊருக்கெல்லாம் பரிகாரம் பண்ணுனவனுக்கு தீக்க முடியாத பிரச்சனைஇருந்திருக்கே. தூக்கு மாட்டிக்கிட்டானே',என்று வாய்விட்டு அழ ஆரம்பித்துவிட்டார். சந்துரு பிரமைபிடித்தது போல நின்றுகொண்டிருந்தான். அவனால் நடப்பது எதையும்நம்ப முடியவில்லை. கதறி அழும் அவர்கள் இருவரையும் நிலைகுத்திய கண்களுடன்வெறித்துக் கொண்டிருந்தான்.

சற்றே நிதானத்தில் இருந்த மணிதான் சந்துருவையும் பெரியவரையும் கைத்தாங்கலாகவெளியே அழைத்து வந்து நாற்காலியில் உட்காரவைத்தான். அருகிலிருந்த சொம்பு தண்ணீரைக்குடித்த சந்துரு அதை பெரியவருக்கு கொடுத்துகுடிக்க வைத்து ஆசுவாசப்படுத்தினான்.

‘என்னங்கய்யா நடந்துச்சு?'

‘நான் என்னன்னு சொல்ல தம்பி. அவன் மனசுக்குள்ள என்ன இருந்துச்சுன்னே தெரில தம்பி. பாழாப்போனவன் கல்யாணமும் பண்ணித் தொலையமாட்டேன்னுட்டான். பொண்டாட்டி புள்ளன்னு இருந்திருந்தா அவங்க மூஞ்சிக்காகவாச்சும் உசுரோட இருந்திருப்பானே,' என்று கதறியவரை தேற்றும் நிதானத்தில் சந்துரு இல்லை. மணிவண்ணன் தான் அவரது கைகளைப் பற்றிக்கொண்டுஆசுவாசப்படுத்தினான்.

சிவராஜைப் பொறுத்தவரை பிரச்சனைகளை சமாளிக்கும் உறுதியான மனநிலைகொண்டவர்தான். எத்தனையோ பேர் அவரிடம்பிரச்சனைகள் குறித்து முறையிடும் போதெல்லாம் ‘கவலப்படாதீங்க. நான் சரி பண்ணி விடறேன். நான்சொல்ற பரிகாரத்தை மட்டும் சரியா பண்ணிட்டுவாங்க. சரி ஆகலன்னா நான் இந்த தொழிலையே விட்டர்றேன்' என்று சவால் விடும் தொனியில் தான்பேசுவார். அலுவலகத்தில் அவருடன் இருக்கும்போது நிறைய பேர் அவரிடம் பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதாக சொல்லி நன்றி சொன்னதை சந்துருவே கேட்டிருக்கிறான். அப்படி மன உறுதி கொண்டசிவராஜ் தூக்கிட்டுக் கொண்டார் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவனுக்குத் தெரியாமல் அவருக்கு என்ன பிரச்சனை இருந்தது? சந்துருவுக்கு அயற்சியாக இருந்தது.

‘என்ன தான் நடந்துச்சு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க'

‘இருங்க தம்பி' என்றவர் வீட்டினுள் ‘வளர்மதிஅந்த செல்போன குடு', என குரல்கொடுத்தார். வளர்மதி சிவராஜின் தங்கை. திருமணமாகி உள்ளூரில் குடியிருக்கிறார்.

‘நீங்களே பாருங்க தம்பி அந்தகொடுமைய. எதுக்கும் இருக்கட்டும்னு பொண்ணுதான் எடுத்து வெச்சா'. என்றார்.

வளர்மதி கொண்டுவந்த செல்போனை வாங்கிப்பார்த்த போது சிவராஜ் திண்ணையில்கிடத்தப்பட்டிருந்தார். அவரது கழுத்து ஒருபக்கமாக இழுபட்டிருந்தது. கயிறு இறுக்கப்பட்டதற்கான அடையாளம் கழுத்தில்தெளிவாக இருந்தது. மருத்துவமனையில் இதை எப்படிக் கவனிக்காமல் விட்டார்கள்?. வாய் வலதுபக்கமாக இழுத்துக் கொண்டு இருந்தது. ஒரு சாடையில் அவர் சிரிப்பதைப் போலதெரிந்தது. அவரின் கண்கள்?... வலது கண்மூடப்பட்டிருக்க இடது கண் முழுவதுமாகத்திறந்திருந்தது. கயிறு இறுக்கியதால் திறந்திருக்க வாய்ப்புள்ளது என்றாலும் இரண்டு கண்களுமல்லவா திறந்திருக்க வேண்டும்? சந்துருவுக்கு குழப்பமாகிருந்தது.

‘கண்ணு ஏங்க திறந்து இருக்கு?', பெரியவரிடம் கேட்டான்.

‘உங்ககிட்ட சொல்லலியா தம்பி. சாகறதுக்கு நாலுநாளைக்கு முன்னாடி அவனுக்கு வாயி ஒரு பக்கமா இழுத்துகிச்சு. டாக்டர்கிட்ட போயிட்டு தான் வந்தான். கண்ண மூட முடிலன்னுசொன்னான். நான் தான் மருந்து சாப்பிட்டா சரியாபோயிடும்னு சொன்னேன். உங்ககிட்டசொல்லலியா?' என்றார்.

சந்துருவுக்கு ஏதோ பிடிபட்ட மாதிரி இருந்தது.
‘அன்னைக்கும் ஆஸ்பித்திரிக்கு போயிட்டு மருந்துவாங்கிட்டு வந்தான். நான் இங்க சைக்கிள தொடச்சுகிட்டு இருந்தேன். அவனோட ஆத்தா திண்ணைல படுத்திருந்தா. வந்தவன் நேரா உள்ரூம்புக்கு போயி கதவ சாத்திகிட்டான். துணிமாத்துறாம் போலன்னு நெனச்சேன்தம்பி. திடீர்ன்னு உள்ளாற டமாருனு சத்தம்கேட்டுச்சு. நானும் அவளும் கதவ தள்ளுனோம். திறக்கல தம்பி. உள்ளாற தஸ்புஸ்ஸுன்னு மூச்சு உடற சத்தம். எனக்கு பயமாபோச்சு. அம்மியத் தூக்கிட்டு கதவ பத்துபன்னெண்டு வாட்டி இடுச்சதுக்கு அப்புறம் தான் நாதாங்கி உட்டுச்சு. உள்ள போயி பாத்தா தொங்கிட்டு இருக்கான். நான் அவன் காலகட்டிப்புடிச்சு மேல தூக்கினேன். ஒரு அசைவும் இல்ல. என் பொண்டாட்டிக்கு எங்கிருந்து தான் அந்த பலம் வந்ததுன்னு தெரியல. கையிலஅருவாமனைய எடுத்து கட்டில் மேல ஏறி கரகரன்னு கயித்த அறுத்தா. ரெண்டு பேரும் தான் கீழெறக்குனோம். அப்பவே உசுரு இல்ல தம்பி'.

சந்துருவுக்கு உடல் சற்றே நடுங்கத் துவங்கியது. ‘யார்ட்டயாச்சும் சொன்னீங்களா?'

‘புள்ளைக்கு தான் போன் பண்ணினேன். அவுடனே வந்துட்டா. எம்பொஞ்சாதி தான்தூக்கு மாட்டிகிட்டான்னு சொன்னா போலீஸு கேஸுன்னு போகும், பத்தாததுக்கு உடம்ப கசாப்புக்கு போன ஆடு மாதிரி அறுத்துடுவானுங்க. அதனால சொல்ல வேணாம்னு சொல்லிட்டா. என்பொண்ணும் அதான் சொன்னா தம்பி. இவனுக்குப் புள்ளையா குட்டியா? எங்கள விட்டா யாரும் இல்ல. செத்துப்போனவன எதுக்கு அறுத்துப் பொதைக்கணும்னு தான் நெஞ்சு அடச்சு செத்துபோயிட்டான்னு சொல்லிட்டோம். ஆஸ்பத்திரிக்கி எல்லாம் கூட்டிட்டு போகல தம்பி’.

சந்துருவுக்கு வியர்வை பெருகியது. மணிவண்ணனும் திக்கித்துப்போய் அமர்ந்திருந்தான்.

பெரியவர் ‘அவனோட சட்டைப்பையில இருந்தது

தம்பி‘ என்று ஒரு பேப்பரை நீட்டினார். சந்துருவுக்கு பழக்கப்பட்ட சிவராஜின் கையெழுத்தில் சந்திரசேகர் என அவனது பெயர் எழுதப்பட்டு இருந்தது.பிரித்தான்.

‘எனக்கு என்ன செய்யறதுன்னு தெரில. இடதுகண்ண மூட முடில. நைட் புல்லா தூங்கமுடில. தூங்கி 4 நாள் ஆச்சு. டாக்டர் இப்போதைக்கு சரி ஆகாதுன்னு சொல்லிட்டார். எனக்கு யாரையுமே பாக்கமுடியல. இந்தியன் வங்கில 12,000 ரூபாயும் கனராவங்கில 8000 ரூபாயும் இருக்கு. இவருக்கு போன்பண்ணுங்க. சந்திரசேகரன். அசிஸ்டன்ட் கமிஷனர், இன்கம்டேக்ஸ். மும்பய், 944********. சிவராஜன்' என்று மட்டும்எழுதப்பட்டு இருந்தது.

சாகும் தருணத்தில் கூட சிவராஜ் தன்னைப்பற்றியே நினைத்திருக்கிறார் என்பதை நினைக்கையில்  சந்துருவுக்கு கண்ணீர் ததும்பியது. சாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அவரிடம் பேசி இருந்தான். அப்போது கூட உடல்நிலை சரியில்லை என்பதாக சிவராஜ் சொல்லவில்லை. சாவதற்கு முதல் நாள் தான் அலுவலக மீட்டிங்கில் இருந்த போது வந்தசிவராஜின் அழைப்பை, பிறகு பேசலாம் எனநினைத்து துண்டித்த சந்துரு வேலைப் பளுவில் அதை மறந்துவிட்டிருந்தான். ஒருவேளை தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதை சொல்லத்தான் சிவராஜ் அழைத்திருந்தாரோ என்னவோ?.

அவரிடம்பேசியிருந்தால் அவரைத் தேற்றி இருக்கமுடியும். தவறு செய்துவிட்டதாக சந்துருவுக்கு துக்கம் பொங்கியது. இந்தக் குற்றுணர்விலிருந்து மீறுவது சாத்தியமற்றது என்பது அவனுக்கு உறைத்தது. சாவுச்செய்தி வந்தபோது 12 மணி இருக்கும். மும்பையிலிருந்து அவசர அவசரமாக பிளைட் பிடித்து மறு நாள் காலை 7 மணிக்கு தான் அவனால் ஊருக்கு வரமுடிந்தது. கொஞ்சம் பக்கத்தில் இருந்திருந்தால்கூட கடைசியாக அவரது முகத்தைப்பார்த்திருக்கலாம்.  சந்துருவுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

‘தம்பி. சாகும்போது கூட உங்க பேர தான் எழுதிவெச்சிருக்கான். அதான் உங்ககிட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டேன். வேற யாருக்கும் இது தெரியாது தம்பி. நான் ஒண்ணு கேப்பேன்

சொல்லுவீங்களா?'

‘என்னங்க ஐயா?'

‘நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சிநேகிதம்னுதெரியும். அவனுக்கு குடும்பம்னு ஏதாச்சும்இருந்துச்சா. அதுல ஏதாச்சும் பிரச்சனையா?'

‘இல்ல ஐயா. இருந்திருந்தா என்கிட்ட சொல்லி இருப்பாரு. அப்பிடில்லாம் இல்ல.'

சந்துருவுக்கு இப்போது எல்லாம் முழுமையாக புரிந்துவிட்டிருந்தது. தனக்கு முகவாதம் வந்ததை

சிவராஜால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனி வாழ்க்கை முழுவதும் ஒரு பக்கமாகிழுத்துக்கொண்ட வாயுடன் மற்றவர்களை சந்திப்பது சிவராஜைப் பொறுத்தவரை நரகம். தன்னிடம் கஷ்டமென்று வருபவர்களிடம் உன் தலையெழுத்தை என்னுடைய ஜோதிடஅறிவால் மாற்றிக்காட்டுகிறேன் என்று  சவால் விட்டஅவர், கோணிப்போன வாயுடன் மீண்டும் அவர்களை எதிர்கொள்ள விரும்பவில்லை. உன் உடல்நலத்தையே உன்னால் காப்பாற்றமுடியவில்லை நீ எப்படி எங்கள் விதியை மாற்றுவாய் என்ற கேலிப்பார்வையை எதிர்கொள்ளஅவரது மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவரது ஈகோ முழுமையாக சிதைந்து போயிருக்கவேண்டும். தனது ஜோதிட அறிவின் மீது சேறுவீசப்படுவதை அவரால் பொறுத்துக்கொள்ளமுடியாது. தனது ஈகோவின் முன்னால் அவர் ஒருகரப்பான் பூச்சியைப் போல சுருங்கி தன்னையே காணாமலடித்துக் கொண்டார். சந்துருபெருமூச்சுவிட்டான். இதையெல்லாம்  சிவராஜின் அப்பாவால் புரிந்துகொள்ள முடியுமென்று சந்துருவுக்கு நம்பிக்கை வரவில்லை.

‘விடுங்க ஐயா. போயிட்டாரு. இனி என்ன பேசிஎன்ன ஆகப் போகுது. இனி இருக்கறத பத்திமட்டும் யோசிங்க' திடீரென்று சிவராஜின் அம்மா வீட்டினுள்ளேஇருந்து கையில் ஒரு பையுடன்வேகவேகமாக வெளியே வந்து வீட்டின் ஓரத்தில்எதையோ கொட்டினார்.

ஜாதகங்கள்.

சிவராஜிடம் கணிப்பதற்காக வாடிக்கையாளர்கள் கொடுத்திருந்த ஜாதகங்கள். மறுபடி வீட்டினுள் சென்றவர் கையில் ஒரு மண்ணெண்னைப்புட்டியைக் கொண்டுவந்து, ஜாதகங்களின் மீது ஊற்றி தீக்குச்சியைக் கிழித்தார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த வளர்மதி சரேலென்று ஓடி அந்த குவியலிலிருந்து ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து சந்துருவிடம்  நீட்டினாள்.

அதன் முகப்பில் சந்திரசேகரன் என எழுதப்பட்டிருந்தது. ஜாதகங்கள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தன. தன்னுடைய ஜாதகத்தை கையில் வாங்கிய சந்துரு கொஞ்ச நேரம் அதைவெறித்துப்பார்த்துவிட்டு தளர்ந்த நடையுடன்  சென்று அதை தீயில் போட்டான். அருகில் அரற்றியவாறு நின்று கொன்டிருந்த சிவராஜின் அம்மாவின் கைகளை ஆறுதலாகப் பற்றிக்கொண்டபோது ஒரு ஆட்டோ வந்து வீட்டின் முன்னால்நின்றது.

ஆட்டோவிலிருந்து இறங்கிய அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருக்கவேண்டும். சிவராஜின் அப்பாவை நோக்கி வணக்கம் சொன்னவர்கள் அவருக்கு அருகிலிருந்த பெஞ்சில்உட்கார்ந்தார்கள்.

‘நான் அவரோட கஸ்டமருங்க. என்னோடபொண்ணுக்கு 32 வயசாகியும் கல்யாணம் ஆகல. ஏதேதோ ஜோசியம் பார்த்தோம். கடசீலஅண்ணன்தான் பரிகாரம் சொன்னாரு. செஞ்சுடனே நல்ல இடமா  அமஞ்சிருக்கு. அத சொல்லிஅவர்கிட்ட பத்திரிக்க குடுக்கலாம்னு வந்தப்ப தான்விஷயத்த சொன்னாங்க. ஹார்ட் அட்டாக்காமே..'

‘நல்லாத்தானுங்க இருந்தான். எந்திரிச்சு கௌம்பிசாமியக் கும்பிட்டுட்டு வாசல்ல வந்து செருப்பமாட்டினான். அப்பிடியே சாஞ்சுட்டான்'  பெரியவர் சொன்னதைக் கேட்டு சிவராஜின் அம்மா வாய்விட்டு கதற ஆரம்பித்திருந்தார்.

‘தெகிரியம் தான்யா சாதகம். யாரு பாத்து என்னபரிகாரம் பண்ணினாலும் மனச உட்டுட்டீன்னாவாழ்க்க இல்ல சாமீ. எதுத்து வாழனும்யா', எனகதறிய சிவராஜின் அம்மாவை கைத்தாங்கலாககூட்டிச் சென்று திண்ணையில் உட்காரவைத்துவிட்டு, கதவோரம் இருந்த வளர்மதியிடம் தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்தசந்துரு ‘என்னைய நாளைக்கு கூப்பிடும்மா', என்றுசொன்னான். வந்தவர்களுடன்பேசிக்கொண்டிருந்த சிவராஜின் அப்பாவைப் பார்த்து கும்பிட்டுவிட்டு வாசலில் இறங்கினான்.

பத்து அடி நடந்தவுடன் பின்னால் வந்த மணிவண்ணன் ‘சந்துரு, என் மச்சான் தான் இங்கடி எஸ் பி. எதுக்கும் அவர்கிட்ட ஒரு வார்த்த  சொல்லிடலாமா?' என்றான்.

‘செத்துப்போனவருக்கு எதுக்குஜோசியம். விடு' என்ற சந்துரு நடையை எட்டிப்போட்டான்.

மார்ச், 2022 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com