மலைப்பாம்பின் கண்கள்
பி. ஆர். ராஜன்

மலைப்பாம்பின் கண்கள்

ராகவின் கனவில் ஒரு மலைப்பாம்பு வந்தது. அவனது முப்பதாவது வயது வரை இப்படிக் கனவில் ஒரு மலைப்பாம்பினைக் கண்டதேயில்லை. ஆனால் திருமணமாகி வந்த இந்த ஏழு மாதங்களில் பலமுறை அவனது கனவில் மலைப்பாம்பு தோன்றிவிட்டது. இதற்குக் காரணம், மிருதுளா.

அவளுக்கு மலைப்பாம்பினைப் பிடிக்கும். குளோப்ஜாமுனைப் பார்த்ததும் நாக்கை சுழற்றுவது போல அவள் மலைப்பாம்பைப் பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கண்கள் விரிய ஆசையுடன் ரசிப்பாள். என்ன பெண்ணிவள் என்று குழம்பியிருக்கிறான்.

அந்த மாநகரில் இருந்த உயிரியல் பூங்காவில் ஒரு கூண்டில் பனிரெண்டு அடி நீளமான மலைப்பாம்பு இருந்தது. எங்கிருந்து அதைப் பிடித்துக் கொண்டுவந்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் திருமணத்திற்குப் பிறகு ஜோடியாகப் போய் அந்த மலைப்பாம்பினைத் தான் முதலில் பார்த்தார்கள்.

‘‘ராகவ், அதோட கண்ணைப் பாரேன். அதுக்குள்ளே ஏதோ ரகசியம் மினுமினுங்குது. பாடியோட டெக்சர், சுருண்டு படுத்துகிடக்கிற ஸ்டைல், அதோட ஸ்மால் மூவ்மெண்ட், எல்லாமே அசத்தலா இருக்கு.. ஐ லைக் இட்.. தூக்கி மடியில வச்சிகிடலாமானு இருக்கு என்றாள் மிருதுளா

அவனுக்கோ மலைப்பாம்பை பார்க்க உள்ளுற பயமாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் ‘‘போவோமா'' என்று கேட்டேன்

‘‘இப்போ தானே வந்தோம்... ஏன் அவசரப்படுறே...' என்றபடியே அவள் தடுப்புவேலியின் மிக அருகில் சென்று மலைப்பாம்பை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்படி என்ன பிடித்திருக்கிறது என அவனுக்குப் புரியவில்லை.

‘‘ஸ்கூல்ல படிக்கும் போதே மலைப்பாம்பை டிராயிங் பண்ணி பிரைஸ் வாங்கியிருக்கேன். இது ஒண்ணும் பாய்சன் இல்லை தெரியுமில்லே'' என்றாள் மிருதுளா

‘‘ஆனாலும் பாம்பு தானே''.. என்றான் ராகவ்

அவள் செல்போனில் பாம்பினை படம்பிடித்துக் கொண்டிருந்தாள். வேடிக்கை பார்க்க வந்த ஒரு சிறுவன் கண்களை மூடிக் கொண்டு அவனது அம்மா பின்னாடி ஒளிந்து கொண்டான்.

சும்மா பாருடா என்று அம்மா அவனை முன்னால் இழுத்துக் கொண்டிருந்தாள்.

ராகவ் அவளைத் தனியே விட்டு, வெள்ளைப் புலியை காணுவதற்காக உள்ளே நடந்தான். திரும்பி வந்தபோதும் அவள் அதே இடத்தில் நின்று மலைப்பாம்பினை ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு ஐஸ்கிரீம் இருந்தது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைத்தபடியே அவள் அசைவற்ற பாம்பின் உடலை கண்களால் வருடிக் கொண்டிருந்தாள். அதைக் காண எரிச்சலாக வந்தது.

பொதுவாக இளம்தம்பதிகள் ஜோடியாகச்

சினிமாவிற்குத் தானே போவது வழக்கம். ஆனால் மிருதுளாவிற்கு சினிமா பார்க்க விருப்பமில்லை. அவள் தனது இருபத்தியாறு வயதிற்குள் பத்துக்கும் குறைவான படங்களைத் தான் பார்த்திருக்கிறாள்.

‘‘சினிமா பார்க்கப் போனால் தூக்கம் வந்துவிடுகிறது'' என்று சொன்னாள்.

அவனால் அப்படி ஒரு முறை கூட சினிமா தியேட்டரில் தூங்க முடிந்ததில்லை.

கல்லூரி நாட்களில் தீபாவளி, பொங்கல் நாளன்று ரிலீசான மூன்று திரைப்படங்களையும் தொடர்ந்து பார்ப்பது அவனது வழக்கம். அவனது ஊரில் மூன்று திரையரங்குகள் இருந்தன. அதில் வாரம் இரண்டுமுறை தான் படம் மாற்றுவார்கள். ஆகவே வாரத்திற்கு ஆறு படங்களைப் பார்த்துவிடுவான். பெரும்பாலும் செகண்ட் ஷோ சினிமா தான். அதுவும் நண்பர்களுடன். படம் விட்டு வீட்டுக்குப் போக முடியாது என்பதால் நண்பனின் வீட்டு மாடியில் போய் உறங்கி எழுந்து அப்படியே கல்லூரிக்குப் போய்விடுவான். இப்படி சினிமாவே பிடிக்காத ஒரு பெண்ணை ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

மிருதுளா பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் விற்பனைப்பிரிவில் பணியாற்றிவந்தாள். ஒரே பெண். அவளது அப்பா  பல் மருத்துவர். பள்ளி படிப்பை ஊட்டி கான்வென்டில் படித்திருக்கிறாள். கல்லூரி படிப்பு மணிப்பால் யுனிவர்சிட்டி. இரண்டு ஆண்டுகள் இத்தாலியில் வேலை செய்திருக்கிறாள். ஆகவே நாலைந்து மொழிகள் சரளமாகப் பேசவும் எழுதவும் முடியும். ஒன்றரை லட்ச ரூபாய் மாத சம்பளம் வாங்குகிறாள்.

மேட்ரிமோனியல் நிறுவனம் ஒன்றின் மூலமாகத் தான் அவள் அறிமுகம் ஆனாள். அவர்கள் இருவரும் முதன்முறையாக அமேதிஸ்ட் காபி ஷாப்பில் சந்தித்துப் பேசிய நாளில் அவளிடமிருந்த கசிந்த பெர்ப்யூம் வாசனை அவனை மயக்குவதாக இருந்தது. அன்று கறுப்பும் மஞ்சளும் கலந்த சல்வார்&கமீஸ் அணிந்திருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.

அவளோ மிக இயல்பாக, தனது வாடிக்கையாளர்களில் ஒருவரிடம் பேசுவது போலச் சரளமாக, பொய் சிரிப்புடன் பேசினாள். அவளாகவே ஆரஞ்சு ஐஸ் டீ ஆர்டர் செய்தாள். அதை ராகவ் குடித்ததேயில்லை

‘‘நீங்கள் ஒரே பையனா‘‘ என்ற கேள்வியை மட்டும் அவள் இரண்டு முறை கேட்டாள்.

‘‘ஆமாம். அப்பா கல்லூரி பேராசிரியர். அம்மா ஸ்கூல் டீச்சர்'' என்று சொன்னான்

‘‘நல்லவேளை நீங்களும் டீச்சராகவில்லை'' என்று சொல்லி சிரித்தாள். இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று எனப்புரியவில்லை. ஸ்டார் ஹோட்டலில் அலங்கரித்து வைக்கபட்ட அன்னாசிபழத்துண்டுகளைப் பார்க்கும் போது ஏற்படும் ஆசையைப் போல அவளது வசீகர அழகின் மயக்கத்தால் அவனும் சிரித்துவைத்தான்.

அவள் வேண்டுமென்றே குரலில் குழைவினை ஏற்படுத்திப் பேசுவது போலத் தோன்றியது

‘‘உங்கள் எடையைத் தெரிந்து கொள்ளலாமா'' என்று கேட்டாள்.

இப்படி எந்தப் பெண்ணும் அவனிடம் கேட்டதில்லை. சொல்லக் கூச்சமாக இருந்தது. மெதுவான குரலில் சொன்னான்.

‘‘அறுபத்தியெட்டு''

‘‘ஐந்து கிலோ குறைக்க வேண்டும்'' என்று புன்னகையோடு சொன்னாள்.

அவள் முன்பாக இருக்கும் போது முகத்தில் மழைத்துளி விழுவது போலவே உணர்ந்தான்.

‘‘வேறு ஏதாவது கேட்க வேண்டுமா'' என்று கேட்டபடி கண்களைச் சிமிட்டினாள்.

‘‘ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்'' என்றான் ராகவ்

‘‘எனக்கே தெரியும்'' என்றாள் மிருதுளா.

‘‘நான் அதிர்ஷ்டசாலி'' என்று சொல்லி லேசாகச் சிரித்தான்

‘‘அதை இன்னமும் நான் முடிவு செய்யவில்லை.

யோசிக்க வேண்டும். நான் எதிலும் அவசரப்படுவதில்லை. நான் கொஞ்சம் வித்தியாசமானவள். என்னைப் புரிந்து கொள்வது கஷ்டம்'' என்றாள் மிருதுளா

‘‘வித்தியாசம் என்றால் எப்படி'' என்று கேட்டான்.

அவள் சிரித்தபடியே ‘‘இப்போதே உங்களைப் பயமுறுத்தவிரும்பவில்லை. ஆனால் நான் அப்படித்தான்'' என்றாள்

பேச்சின் ஊடாக அவள் தனது சிறிய உதடுகளை நாக்கால் வருடிக் கொண்டதை கவனித்துக் கொண்டேயிருந்தான். கவர்ச்சியான உதடுகள். மேலுதடு சற்றே சிறியது போலத் தோன்றியது.

‘‘உங்களை விட நான் ஒரு இன்ஞ் உயரம் அதிகம் என நினைக்கிறேன்'' என்றாள்.

‘‘அப்படியா'' என வியப்போடு கேட்டபடியே ‘‘அது ஒன்றும் பிரச்னையில்லை'' என்றான் ராகவ்

‘‘எனக்குப் பிரச்னையாக இருக்கும். நீங்கள் உயரமான காலணி அணிந்து கொள்ள வேண்டும்'' என்றாள்

‘‘அதற்கென்ன'' என்று சிரித்துவைத்தான்.

‘‘உங்களுக்குக் காரோட்டத் தெரியுமா'' எனக்கேட்டாள்

‘‘இல்லை. பைக் மட்டும் தான் ஒட்டுவேன்''

‘‘நான் நன்றாகக் கார் ஒட்டுவேன். வேலைக்குச் சேர்ந்தவுடனே கார் வாங்கிவிட்டேன். ஆபீஸிற்குக் காரில் தான் போகிறேன். ஐ லவ் டிரைவிங்'' என்றாள்

‘‘அதுவும் நல்லது தான் வெளியே எங்காவது போக டாக்ஸி புக் பண்ண வேண்டிய அவசியமில்லை'' என்றான்

அதை அவள் ரசிக்கவில்லை. நிதானமாகத் தனது கலைந்த கூந்தலை கோதிவிட்டபடியே தேநீரோடு இருந்த ஆரஞ்சு துண்டினை சுவைத்தாள்.

‘‘என்ன கார் வைத்திருக்கிறேன் என்று கேட்க தோணவேயில்லையா'' என்று கேட்டாள்

‘‘சாரி.. எனக்குக் காரைப் பற்றி ஒன்றுமே தெரியாது''

‘‘ரோட்டில் கண்ணை மூடிக் கொண்டு தான் போவீர்களா?'' என்று சீண்டும் குரலில் கேட்டாள்

‘‘ஹெல்மெட் போட்டிருப்பதால் எதையும் கவனிக்க மாட்டேன்'' என்றான்

அவள் சக்கரை துண்டில் ஒன்றை தனியே எடுத்து வாயிலிட்டு ருசித்தபடியே மௌனமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வை அவனுக்குள் எதையோ தேடுவது போல உணர்ந்தான். என்ன பார்க்கிறாள். அவனால் அந்த ஊடுருவலைத் தாங்க முடியவில்லை. அவள் புன்சிரிப்புடன் சொன்னாள்

‘‘நாம் இன்னொரு முறை சந்திப்போம்''

அவள் போனபிறகும் அந்த நறுமணம் அவளது இடத்தைச் சுற்றிலும் நிரம்பியிருந்தது. அவளைப் போலவே ஒரு சக்கரைத்துண்டினை ராகவும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

அதன்பிறகு மூன்று முறை தனியே சந்தித்துப் பேசினார்கள். பிறகு தான் இருவர் வீட்டிலும் பேசி திருமணம் முடிவானது. வழக்கமாகத் திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணம் போலின்றிக் கடற்கரை சாலையிலுள்ள ரெசார்ட் ஒன்றில் ஆடம்பரமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது. மிருதுளாவின் அப்பா நிறையச் செலவு செய்திருந்தார். ஹனிமூனிற்காக ஹவாய் தீவிற்குப் போனார்கள். விதவிதமான உணவு வகைகளை, மீன்களை அவள் விரும்பி சாப்பிட்டாள். ராகவிற்குச் சோறு கிடைக்காதா என்று ஏக்கமாக இருந்தது.

படுக்கையில் அவனை முத்தமிடும் போது கூட மிருதுளா நிதானமாக அவனது உதட்டில் தனது உதட்டினைப் பதித்தாள். அழுத்தமான முத்தம். கட்டிக் கொள்வதும் மெதுவாகவும் நீண்டதாகவும் இருந்தது. வெயில்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல அவசரமாகவும் குளிர்ச்சி தருவதுமாக இருந்தது அவர்களின் உடற்கூடல்.

சென்னை திரும்பிய பிறகு அவர்கள் தற்காலிகமாக மிருதுளா தங்கியிருந்த அபார்ட்மெண்டிலேயே சில நாட்கள் ஒன்றாக வசித்தார்கள். புதுவீடு ஒன்றை வாடகைக்குப் பிடிக்க வேண்டும் என்பதில் மிருதுளா தீவிரமாக இருந்தாள்.

புதிதாகக் கட்டப்பட்ட முப்பத்துநான்கு அடுக்குகள் கொண்ட குடியிருப்பு ஒன்றில் முப்பத்து நான்காவது மாடியில் ஒரு வீட்டினை வாடகைக்குப் பிடித்தாள்.

‘‘முதற்தளமாக இருந்தால் நன்றாக இருக்குமே'' என்றான் ராகவ்

‘‘இருப்பதிலேயே  மிக உயரமான இடத்தில் குடியிருக்க வேண்டும். இந்த நகரம் என் காலடிக்கு கீழே இருப்பதைக் காணுவது சந்தோஷமாக இருக்கிறது'' என்றாள்.

அவ்வளவு உயரத்தில் குடியிருப்பது அவனுக்குச் சௌகரியமாகவே இல்லை. ஒருவேளை லிப்ட் இயங்காவிட்டால் என்ன செய்வது. கண்ணாடி தடுப்பில் விரிசல் ஏற்பட்டுவிட்டால் என்ன ஆகும். காலை வெயில் ஏன் இவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்று மனதில் ஏதேதோ குழப்பங்கள், பயம் உருவாகிக் கொண்டேயிருந்தது.

அவளோ அன்றாடம் காலையில் கையில் காபியுடன் பால்கனியில் போய் நின்று கொண்டு விரிந்து கிடக்கும் நகரையும் காலை வெளிச்சத்தையும் ரசித்துக் கொண்டிருப்பாள். காற்று மிக வேகமாக அடிக்கும்.அதில் அவளது கூந்தல் அலையாகப் பாயும். அவனுக்கு அந்தப் பால்கனிக்கு போய் நிற்பது பிடிக்கவே பிடிக்காது.

மிருதுளா நன்றாகச் சமையல் செய்வாள். ஆனால் விரும்பினால் மட்டுமே சமைப்பாள். மற்ற நேரங்களில் ஹோட்டலில் இருந்து தான் உணவு வரவழைக்கப்படும். அவள் ஒரு நாளும் அலுவலகத்திற்குத் தாமதமாகப் போனது கிடையாது. ஓய்வெடுப்பதே அவளுக்குப் பழக்கமில்லை. வீட்டிலிருந்தாலும் அங்குமிங்குமாக நடந்து கொண்டேயிருப்பாள். அவனுக்கோ அலுவலகம் விட்டுவந்தவுடன் சோபாவில் படுத்துக் கொள்ள வேண்டும். ஞாயிறு என்றால் மதியம் வரை தூங்க வேண்டும். அவள் அப்படியில்லை. எல்லா நாளும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடத் துவங்கிவிடுவாள். அழகிலும் ஆரோக்கியத்திலும் அவளுக்குக் கூடுதல் அக்கறை இருந்தது.

இரண்டு பேரும் ஒன்றாகக் காரில் கிளம்பி போவார்கள். மின்சார ரயில் நிலையத்தில் அவனை விட்டுவிட்டு அவள் தனது காரில் அலுவலகம் செல்லுவாள். ஒருமுறை கூட அவனது அலுவலகம் வரை காரில் கொண்டுவந்து விட்டதில்லை. பெரும்பாலும் அவளது வேலை முடிந்து திரும்பி வர இரவு ஒன்பது மணியாகிவிடும். அவன் ஆறுமணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுவான்.

அவள் வரும்வரை டிவி பார்த்துக் கொண்டிருப்பான். சில நாட்கள் அவனாக ஏதாவது சமைப்பதுண்டு. திருமண வாழ்க்கை பற்றி அவனுக்குள் இருந்த கனவுகள் யாவும் சில வாரங்களில் வடிந்து போனது. அவசரமாகப் படித்துமுடித்த புத்தகம் போலவே வாழ்க்கையை உணர்ந்தான்.

அவனுக்கு டாய்லெட்டை பயன்படுத்த தெரியவில்லை என்று ஒரு நாள் மிருதுளா சண்டைபோட்டாள். இன்னொரு நாள் பிரிட்ஜில் அவள் வைத்திருந்த சீன உணவு வாடை அடிக்கிறது என்று அவளிடம் கோபம் கொண்டு கத்தினான். சிறுசிறு சண்டைகளைத் தாண்டி அவள் அடிக்கடி அவனுக்குச் சர்ப்ரைஸ் கிப்ட் என ஏதாவது பரிசுப் பொருட்களை வாங்கித் தந்தபடியே இருந்தாள். அவனும் வாரம் தவறாமல் அவளை ஷாப்பிங் அழைத்துக் கொண்டு போனான். அவனுக்குப் பிடிக்காத உணவகத்தில் அவளுக்காகச் சாப்பிட்டான். ஒவ்வொரு செயலிலும் அவளது நிதானம் வியப்பூட்டுவதாக இருந்தது.

ஆன்லைனில் அவள் விநோதமான பொருட்களை வாங்குவது வழக்கம். ஒருநாள் நீலவெளிச்சம் பாய்ச்சும் சுவரில் பொருத்தக்கூடிய விளக்குகளை வாங்கிப் படுக்கை அறையில் மாட்டினாள். சுழலும் நீலவெளிச்சம் அறையில் நிரம்பி அறை ஒரு நீலவெளிச்சக்குளம் போலமாறியது. அதற்குள் அவள் நடமாடுவதைக் காணும் போது ஏதோ கனவில் நடப்பது போலவே இருந்தது.

இன்னொரு நாள் அவன் அலுவலக வேலையில் பரபரப்பாக இருந்த போது வீடியோ ஒன்றை அனுப்பி வைத்து உடனே பார் என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். உடனே அதை ஒடவிட்டுப் பார்த்தான்.

குரங்குக்குட்டி ஒன்றை ஒரு மலைப்பாம்பு விழுங்கும் வீடியோ . அதைக் காண சகிக்கவில்லை.

அவளுக்குப் போன் செய்து ஏன் அதை அனுப்பி வைத்தாள் என்று கோபமாகக் கேட்டான்

‘‘அந்த மலைப்பாம்பு குரங்கை விழுங்கிட்டு எவ்வளவு சைலண்டா திரும்பி பார்க்குது பாத்தியா.. சம் திங் ஸ்ரேஞ்ச். ''

‘‘அந்த குரங்குக்குட்டி பாவமில்லையா''

‘‘என்ன பாவம். பாம்பு அது பசிக்கு சாப்பிடுது.. இதுல என்ன தப்பு. ''

‘‘இந்த மாதிரி வீடியோ எல்லாம் இனிமே அனுப்பாதே.. இதை எல்லாம் நான் எதுக்காகப் பாக்கணும்

சொல்லு''

‘‘நான் இந்த வீடியோவை இன்னைக்கு முப்பது தடவை பாத்தேன். ஐ லைக் இட். நீ என்னோட பெட்டர் ஹாப் அதான் உனக்கு அனுப்பி வச்சேன்''

‘‘ஸ்டுபிட்'' என்று போனை துண்டித்தான்

அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு அவர்களுக்குள் பேச்சில்லை. அவனது கோபத்தை அவள் பொருட்படுத்துவதேயில்லை. அந்தப் புறக்கணிப்பு அவனை மேலும் ஆத்திரம் கொள்ள வைத்தது.

அந்த ஞாயிறு அன்று அவனுக்குப் பிடித்தமான உணவு வகைகளை நிறையச் செய்திருந்தாள். வேண்டுமென்றே பட்டுப் புடவை கட்டிக் கொண்டாள். நிறைய முத்தங்களைத் தந்தாள். அவள் மீதான கோபம் கரைந்து போனது.

இது நடந்த சில தினங்களுக்குப் பின்பு மிருதுளா அலுவலகம் கிளம்பும் போது அவனிடம் சொன்னாள். ‘‘எனக்கு ஒரு பேக்கேஜ் வரும்.. அதை வாங்கிவச்சிடு.. பிரிக்க வேண்டாம்.. நான் வந்து பிரிச்சிக்கிடுவேன்''

‘‘என்ன பேக்கேஜ்'' என்று கேட்டான்

‘‘சர்ப்ரைஸ்'' என்று சிரித்தாள்.

அவள் சொன்னது போலவே ஒரு பெரிய பாக்ஸ் ஒன்றை ஒரு ஆள் கொண்டுவந்திருந்தான். எங்கேயிருந்து வந்திருக்கிறது என்று பார்த்தான். தைவானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

என்ன ஆர்டர் பண்ணியிருக்கிறாள் என்று பார்க்க ஆவலாக இருந்தது. ஒருவேளை அவள் கோபித்துக் கொள்ளக்கூடும் என்பதால் அதைப் பிரிக்காமலே வைத்திருந்தான்

வழக்கத்திற்கு மாறாக அன்று வீட்டுக்கு வருவதற்கு முன்பாக மிருதுளா போன்செய்து ‘‘பேக்கேஜ் வந்துவிட்டதா?'' என்று கேட்டாள்.

‘‘மதியமே டெலிவரி செய்துவிட்டார்கள்'' என்றான்

‘‘ மெக்டொனால்ட்ஸில் உனக்கு ஏதாவது வாங்கி வரவா'' என்று கேட்டாள்

இன்று சமைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டவனாகச் சொன்னான்

‘‘நீயே பாத்து வாங்கிடு''

‘‘உனக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்'' என்று கேட்டாள்.

‘‘ஸ்வீட் சாப்பிடுறதை விட்டுட்டேன்'' என்று உணர்ச்சியற்றுச் சொன்னான்.

‘‘இன்னைக்குச் சாப்பிடுறோம்'' என்றபடியே அவள் போனை துண்டித்தாள்.

மிருதுளா வீடு திரும்பும் போது அவள் கையில் இரண்டு பைகள் இருந்தன. ஒன்றில் உணவு. மற்றொன்றில் நிறைய இனிப்பு வகைகள். ஒருவேளை இன்று தான் அவளது பிறந்தநாளா.. அவள் பிறந்தநாள் மே எட்டு என்று சொன்னதாக நினைவு. இன்றைக்கு என்ன விசேஷம் என்று அவனால் கண்டறிய முடியவில்லை.

அவள் கவனமாக அந்தப் பேக்கேஜை பிரித்தாள். உள்ளே ஆறாக மடிக்கபட்ட மலைப்பாம்பு இருந்தது. நிஜம் போலத் தோற்றமளிக்கும் ரப்பர் தயாரிப்பு. அவள் ஆசையோடு அதைத் தடவிக் கொடுத்தாள்.

‘‘தொட்டுப்பாரேன். எவ்வளவு சாப்டா இருக்கு''

‘‘இது எதுக்கு மிருதுளா'' என்று கேட்டான்.

‘‘இதோட கூடவே ஒரு ஹேண்ட்பம்ப் குடுத்துருக்காங்க. நாம தான் காற்று அடைச்சிகிடணும்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணு'' என்றாள்.

அந்த ஹேண்ட் பம்பை எடுத்து ரப்பர் மலைப்பாம்பின் உடலில் இருந்த ஒரு துளையினைத் திறந்து காற்றடித்தான். மெல்ல காற்று நிரம்பி மலைப்பாம்பின் உடல் பெரியதாக ஆரம்பித்தது. பத்தடிக்கும் அதிகமான நீளத்தில் அந்த மலைப்பாம்பு மெதுக்மெதுக்கென்ற உடலுடன் உருவெடுத்தது. அவள் அதை அப்படியே தனது தோளில் போட்டுக் கொண்டு சிரித்தாள்.

‘‘கிட்டவா.. சேர்ந்து போட்டுகிடுவோம்'' என்றாள்.

அவனுக்கு விருப்பமில்லை என்றாலும் அவள் அருகில் போய் நின்றாள். அவள் அந்தக் காற்றடைக்கப்பட்ட மலைப்பாம்பினை அவன் தோள் மீதும் போட்டாள்.

‘‘எப்படியிருக்கு.. சில்கி டச் பீல் பண்ண முடியுதா'' என்று கேட்டாள்.

‘‘நெளுக் நெளுக்குனு என்னமோ மாதிரி இருக்கு'' எனப் பாம்பை உதற முற்பட்டான்.

‘‘ஆன்லைன்ல தேடி தைவான்ல இருந்து வரவழைச்சேன். 300 டாலர்'' என்றாள்.

‘‘வேஸ்ட் ஆப் மணி.. இது எதுக்கு மிரு.. எனக்குப் பிடிக்கலை'' என்றான், ராகவ்.

‘‘என்னோட பணம். நான் எப்படியும் செலவு செய்வேன். உனக்கு எது தான் பிடிக்குது?'' என்றபடியே அவள் அந்த ரப்பர் மலைப்பாம்பினை அணைத்தபடியே சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டாள். அந்தக் கோலத்தில் அவளைக் காண அவனுக்குச் சற்று பயமாகவே இருந்தது. அவள் பாம்பின் தலையைத் தடவிவிட்டபடியே அதைத் தன் முகத்தோடு வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். பாம்பின் வால்

சோபாவிற்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.

‘‘ராகவ்.. இன்னைக்கு நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். நாம அதைச் செலிபரேட் பண்ணுவோம். ''

‘‘இதுல செலிபரேட் பண்ண என்ன இருக்கு''

‘‘உனக்குச் சொன்னா புரியாது. நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னேன். ஐ ஆம் டிபரெண்ட்னு.. நீ தான் தலையாட்டுனே''

‘‘அதுக்காக இப்படியா.. யாராவது வீட்ல இப்படி மலைப்பாம்பு வச்சிருப்பாங்களா''

‘‘இது நிஜமில்லை. பொம்மை''

‘‘ உனக்கு எதுக்கு பொம்மை''

‘‘நீ எதுக்காக மீன் தொட்டி வச்சிருக்கே.. உனக்கு மீனை பார்க்க பிடிக்குது.. அதை நான் ஏதாவது கேட்டனா''

‘‘அதுவும் இதுவும் ஒண்ணா''

‘‘ஒண்ணு தான்.. லுக் ராகவ். நாம சேர்ந்து வாழும் போது உனக்குப் பிடிச்சாலும் பிடிக்காட்டியும் எனக்காகச் சில விஷயங்களை ஏத்துகிடத்தான் வேணும்''

‘‘அப்படி ஒண்ணும் கட்டாயம் இல்லை''

‘‘ நோ. பிராப்ளம்.. உன்கிட்ட பெர்மிசன் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை'' என்று சிரித்தபடியே அவள் டிவி ரிமோட்டினை ஆன் செய்து இத்தாலிய சேனல் ஒன்றை பார்க்க துவங்கினாள். அவளுக்குக் கோபம் வந்தால் இப்படித் தான் உடனே வேறு மொழியில் பேச ஆரம்பித்துவிடுவாள். வேற்றுமொழி நிகழ்ச்சிகளைப் பார்க்க துவங்கிவிடுவாள்.

ராகவ் தன் அறைக்குள் போய்க் கதவை தாழிட்டுக் கொண்டான். அவனது கோபம் வடிய நிறைய நேரமானது. ஒருவேளை படுக்கை அறைக்கே அந்த ரப்பர் மலைப்பாம்பை கொண்டுவந்துவிடுவாளோ என்று தோன்றியது. நல்லவேளை அவள் அதைச் சோபாவில் விட்டுவிட்டு எதுவும் நடக்காதவள் போலத் தனியே சாப்பிட்டுவிட்டு வந்து படுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலை அவள் குளிக்கப் போகும்போது அந்த மலைப்பாம்பும் கூடவே குளியல் அறைக்குள் போனது. அதையும் ஷவரில் நனையவிட்டாள். சோப்பு நுரைகள் பூசி விளையாடினாள். ஈரமான மலைப்பாம்பினை பால்கனியில் கொண்டு வந்து உலரப் போட்டாள்.

ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அவன் அலுவலகம் கிளம்பினான்.

காரில் போகும்போது மிருதுளா சொன்னாள்

‘‘நீ ஒவர் ரியாக்ட் பண்ணுறே.. அது ஒரு டாய்.. நீ வீடியோ கேம் ஆடுறதில்லையா? அது மாதிரி தான்.. அதைப் புரிஞ்சிக்கோ''..

அவன் பதில் சொல்லவில்லை. வேண்டுமென்றே அன்று அவனது அலுவலகம் வரை அவளே காரில் கொண்டுவந்து விட்டுப்போனாள். அன்று மாலை வீடு திரும்பிய போது பணிப்பெண் உலர்ந்த மலைப்பாம்பினை ஹாலின் நடுவே வைத்துப் போயிருந்தாள். அது எரிச்சலை அதிகப்படுத்தியது.

அதன் அருகில் அமர்ந்து அதை லேசாகத் தொட்டுப் பார்த்தான். நிஜபாம்பின் உடலைப் போலவே இருந்தது. ஆனால் அசையாத கண்கள். தலையினை அழுத்தினால் பிளாஸ்டிக் நாக்கு வெளியே வந்து துடித்தது. அந்தப் பாம்பினை அவளைப் போலவே தோளில் போட்டுக் கொண்டு கண்ணாடி முன்பு போய் நின்றான். அவனது உருவம் விசித்திரமாகத் தோன்றியது. இதைப் போய் எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்து வாங்கியிருக்கிறாள். ஊரிலிருந்து யாராவது வந்தால் என்ன நினைப்பார்கள். அப்படி இந்த மலைப்பாம்பில் என்ன தான் இருக்கிறது.

அந்த மலைப்பாம்பில் இருந்த காற்றைப் பிடுங்கி அதை வெறும் கூடாக மாற்றினான். பின்பு அதை மடித்துச் சமையல் அறை மூலையில் கொண்டு போய்ப் போட்டான். அன்று மிருதுளா வருவதற்கு இரவு ஒன்பதரை மணியாகியது. ஹாலிற்குள் நுழைந்தவுடன் மலைப்பாம்பினை தான் தேடினாள். அதைக் காணவில்லை என்றவுடன் அவள் சப்தமாகக் கேட்டாள்

‘‘மலைப்பாம்பை என்ன செய்தே?''

‘‘கிச்சன்ல கிடக்கு''

‘‘காற்றைப் பிடுங்கியிருப்பியே''.. என்றபடியே கிச்சனை நோக்கி நடந்தாள்.

''ஆமாம். அதைப் பார்க்க அருவருப்பா இருக்கு..''

‘‘அது உன்னோட பிரச்சனை. நீ இப்படிச் செய்வேனு எனக்கு நல்லா தெரியும். நீ ஒரு பெர்வர்ட்''

‘‘இதுல பெர்வர்ஷனுக்கு என்ன இருக்கு.. யார் வீட்லயாவது இப்படி மலைப்பாம்பு வச்சிருக்காங்களா''

‘‘யார் வச்சிருந்தாலும் வைக்காட்டியும் எனக்குப் பிரச்சனையில்லை. நான் மத்தவங்க மாதிரி கிடையாது''

‘‘இது உன்னோட வீம்பு. ''

‘‘ஆமா. நான் அப்படித்தான்'' என்றபடியே அவள் வேண்டுமென்றே மலைப்பாம்பினை ஹேண்ட்பம்ப் கொண்டு நிறையக் காற்று அடித்துப் பெரியதாக்கினாள். வழக்கமான அதன் சைஸை விடவும் மிகப்பெரியதாகியது.

அதை ஆசையோடு அணைத்துக் கொண்டு அவள் படுக்கை அறைக்கே சென்றாள். பலமாக இசையை ஒலிக்கவிடும் சப்தம் கேட்டது. ஒருவேளை மலைப்பாம்புடன் ஆடுகிறாளா.

அன்றிரவு ராகவ் சோபாவில் உறங்கினான். காலையில் அவள் அலுவலகம் கிளம்பும் போது வேண்டும் என்றே தன்னோடு அந்த மலைப்பாம்பினை லிப்டில் கொண்டு சென்றாள். லிப்டில் வந்த கிழவர் அவளிடம் ‘‘ரப்பர் பொம்மையா, எங்கே விற்கிறது'' என்று கேட்டார்.

‘‘ தைவான் '' என்று சொல்லி சிரித்தாள்.

‘‘நான் அஸ்ஸாம் காட்டிலே மலைப்பாம்பை நேர்ல பாத்துருக்கேன்'' என்று சிரித்தார் கிழவர்.

அவள் தன் காரின் பின்சீட்டில் அந்த மலைப்பாம்பினை போட்டுக் கொண்டாள். அன்று அவனைத் தனது காரில் அழைத்துக் கொண்டு போகவில்லை. அவனாக பைக்கில் அலுவலகம் சென்றான். அலுவலகத்தில் வேலை செய்யவே பிடிக்கவில்லை. பகலில் அவளிடமிருந்து போன் எதுவும் வரவில்லை. ஊரிலிருந்து அம்மா போன்செய்த போது நடந்தவற்றைச் சொன்னான். அம்மா நம்பமுடியாதவள் போலக் கேட்டாள்

‘‘ ரப்பர் பாம்பா.. அதை எதுக்குடா வாங்கினா''

‘‘ யாருக்கு தெரியும். அவ ஒரு டைப்மா ''

‘‘ நல்லவேளை உசிரோட பாம்பை வாங்காம போனாள்'' என்று அம்மா அதிர்ச்சியுடன் சொன்னாள்

‘‘ அதையும் செய்வாள். எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியலை''

அம்மா கோபத்தில் திட்டுவது கேட்டது. அன்றிரவு அம்மாவோ  அப்பாவோ மிருதுளா வீட்டில் பேசியிருக்க வேண்டும். மறுநாள் காலை மிருதுளாவிற்கு அவளது அம்மா போன் செய்து விசாரித்தாள்.

‘‘ நமக்குள்ளே நடக்கிறதை எல்லாம் ஏன் வெளியே சொல்றே?''

‘‘ எங்க அம்மா கிட்ட தானே சொன்னேன்.. ''

‘‘நீ என்ன ஸ்கூல் பையனா.. அம்மாகிட்ட

சொல்றதுக்கு.. உன் மனசில என்ன நினைச்சிட்டு இருக்கே.நான் என்ன லூசா''

‘‘ஆமா.. ''

‘‘நீ எதிர்பாக்குற மாதிரி என்னாலே இருக்கமுடியாது ராகவ்''

‘‘அதை எப்பவோ நல்லா புரிஞ்சிகிட்டேன். ''

‘‘அப்போ கண்ணையும் காதையும் மூடிகிட்டு இரு.. இன்னொரு தடவை இப்படி எங்க வீட்ல கம்ப்ளெயிண்ட் பண்ணினே.. நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது''

‘‘உனக்கு என்கூட இருக்கப் பிடிக்கலைன்னா.. போயிடு.. என்னை ஏன் சித்ரவதை பண்ணுறே''

‘‘நான் ஏன் போகணும்.. நான் இங்கே தான் இருப்பேன்''

‘‘அப்போ நான் போறேன்.. ''

‘‘அது உன் இஷ்டம்'' என்றபடியே மலைப்பாம்பை தூக்கிக் கொண்டு பால்கனிக்கு நடந்தாள். பால்கனி தடுப்பு சுவர் மீது சாய்ந்து கொண்டு பாம்பை கையில் பிடித்தபடியே காற்றில் அலையவிட்டாள். அவள் மீதான கோபத்தைக் காட்டுவதற்காக அதிகாலையிலே அலுவலகம் கிளம்பிப் போனான்.

அன்றிரவு மிகத் தாமதமாகவே வீடு திரும்பினான். வீட்டில் அவளைக் காணவில்லை. எங்கே போயிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. அடுத்த நாளும் அவள் வீடு திரும்பவில்லை என்பதால் அவளது அப்பாவிற்குப் போன் செய்தான். அவரும் போனை எடுக்கவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு மதியம் அவனுக்கு மிருதுளா போன் செய்தாள்.

‘‘நான் முடிவு பண்ணிட்டேன். ராகவ்.. ஐ ஆம் லீவிங்''

‘‘அது உன் இஷ்டம். ''

‘‘வீட்டுக்காக நான் இதுவரைக்கும் ரெண்டு லட்சத்துக்கு மேல செலவு பண்ணியிருக்கேன். நீ அதைத் திருப்பிக் குடுக்கணும்.. அந்த வீடு நான் அட்வான்ஸ் குடுத்து பிடிச்சது. அதனாலே அதைக் காலி பண்ணுறேன்னு சொல்லிட்டேன். நீ வேற வீடு பாத்துக்கோ.. நம்ம கல்யாணம் ஒரு பேட் ட்ரீம்! அவ்வளவு தான்

சொல்லமுடியும்''

எனப் போனை துண்டித்துவிட்டாள். இந்தக் கோபம் வடிந்து அவள் திரும்பிவந்துவிடுவாள் என்று தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் இவ்வளவு பிடிவாதமாக நடந்து கொண்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு மறுபடி போன் செய்து திட்ட வேண்டும் போலிருந்தது. மறுபடி அழைத்த போது அவள் போனை எடுக்கவில்லை.

அன்றிரவு அவன் தன் வீட்டிற்குத் திரும்பி வரும் போது அவள் தனது உடைகள், பொருட்களைக் காலி செய்து எடுத்துப் போயிருப்பது தெரியவந்தது. ஆனால் அவள் அந்த ரப்பர் மலைப்பாம்பை எடுத்துக் கொண்டு போகவில்லை. அது ஹாலின் நடுவே தனியே கிடந்தது.

ஏன் அதை விட்டுப்போனாள். இதனால் தானே இவ்வளவு பிரச்சனையும். உண்மையில் அவள் என்ன தான் தேடுகிறாள். ஏன் அவள் விருப்பங்கள் இத்தனை விசித்திரமாக இருக்கின்றன.

அவன் ரப்பர் பாம்பினை காலால் எத்தினான். அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை.

முரட்டுத் தனமாக ஆத்திரம் தீருமளவு அந்த மலைப்பாம்பினை ராகவ் மிதித்தான். பின்பு அதன் காற்றைப் பிடுங்கிவிட்டு பால்கனிக்கு எடுத்துச் சென்று வெளியே வீசி எறிந்தான்.

காற்றில் அந்தப் பாம்பு பறந்து போவது பார்க்க அழகாகவே ருந்தது.

டிசம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com