காஷ்மீரில் நேற்று நடந்த தாக்குதலில் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலை தாங்கள்தான் நடத்தினோம் என 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' என்னும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் தெற்கு காஷ்மீருக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை வெளியான தகவலின் படி, இந்தத் துப்பாக்கி சூட்டில் கிட்டத்தட்ட 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னால் 'நாங்கள் தான் இருக்கிறோம்' என்று 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' என்னும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா-வின் ஒரு பிரிவாக சொல்லப்படுகிறது.
'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' அமைப்பு ஆன்லைன் மூலம் இளைஞர்களை வேலைக்கு எடுத்தல், ஆயுதங்களை வாங்குதல், போதை பொருள்களை கொண்டு வருதல், தீவிரவாதிகளை ஊடுருவச் செய்தல் போன்ற நாசவேலைகளை செய்துவருகிறது எனவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்ட் அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இந்த அமைப்பின் தலைவரான ஷேக் சஜ்ஜாத் குல்லையும் தீவிரவாதி என அறிவித்தது. தற்போது இந்த அமைப்பின் கீழ் தான் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடந்த தாக்குதல்களில், இது மிகப் பயங்கர தாக்குதல் ஆகும்.