பா.ம.க.வில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம்!

பா.ம.க.வில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம்!
Published on

பாமகவில் இருந்து சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 எம்எல்ஏக்களை தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வழக்கறிஞர் பாலுவையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து இடைநீக்கம் செய்வதாக ராமதாஸ் ஆதரவாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

மயிலம் சிவகுமார், மேட்டூர் சதாசிவம், தருமபுரி வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் சமீபத்தில் அன்புமணி நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸின் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.

சமீபகாலமாக பாட்டாளி மக்கள் கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே.மணியால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாக்குழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில், அந்த குழு அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோரின் செயல்பாடுகள் மற்றும்

தமிழக சட்டப்பேரவை தலைவரைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் பற்றி பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாக சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரணையில் தெரியப்படுத்தியதால் அவர்கள் மீது விரிவாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

முழுமையான ஒழுங்கு நடவடிக்கை குழு முன் விசாரணைக்கு அவர்கள் நால்வரும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால் கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரணை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விசாரணைக்குழு அவர்கள் நால்வரையும் விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் ராமதாஸ் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com