கேரளாவில் அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் வழங்க வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அதை கேரளா அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
கேரளாவில் அங்கன்வாடி படிக்கும் ஒரு குழந்தை உப்புமாவுக்கு பதிலாக பொரித்த கோழி, பிரியாணி தாங்க என கோரிக்கை விடுத்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. வைரலாகும் வீடியோவில், தொப்பி அணிந்திருந்த குழந்தை, 'எனக்கு அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி மற்றும் பொரித்த கோழி வேண்டும் என்று அப்பாவி போல் தனது தாயிடம் கேட்கிறான். இந்த வீடியோவை குழந்தையின் தாய் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.
இந்த வீடியோவை மேற்கோள் காட்டி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், குழந்தை கோரிக்கை வைக்கும் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: குழந்தை அப்பாவித்தனமாக கோரிக்கை விடுத்துள்ளான். அங்கன்வாடியின் மெனு திருத்தப்படும்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காக அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்தின் கீழ், அங்கன்வாடிகள் மூலம் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையுடன் ஒருங்கிணைந்து, உள்ளாட்சி அமைப்புகள் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.