சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி தாருங்கள்!: ஆளுநருக்கு சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணையை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஆளுநர் ரவிக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், " முன்னாள் அதிமுக அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்தது.

அத்துடன் இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ. கோரியது. மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சிபிஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு கடந்த 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால், துரதிருஷ்டவசமாக இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல், முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதின்மூன்று (13) மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே, மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com