தேமுதிகவுக்கு ஒரு நாஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது முழுக்க முழுக்க உண்மை. அதனால்தான், கடந்த மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாக பேசுவேன்” என தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் கூறியுள்ளார்.
ராஜ்ய சபா சீட் அளிக்கிறோம் என யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அதை மறுத்துள்ளார் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ்.
இது தொடர்பாக அவர் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ”ஜனவரி 9இல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. அதில், தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் முறைப்படி அறிவிப்பார். தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக முன்னரே வாக்குக் கொடுத்திருந்தார்கள். முழுக்க முழுக்க உண்மை இது. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வேன்.
அதிமுக அளித்த உத்தரவாதத்தால் தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு முன் நான் 2009இல் கள்ளக்குறிச்சியிலும் 2014இல் சேலத்திலும் போட்டியிட்டேன். சேலத்தில் எனக்காக மோடி பிரச்சாரம் செய்தார். 2019இல் மீண்டும் பாஜக கூட்டணியில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டேன். 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் யோசிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.