ரவீந்திரநாத் எம்.பி.யாக தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு!
தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு சுமார் 76,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறி தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பு கடந்த ஜூலை 6ஆம் தேதி வழங்கப்பட்டது. அதன்படி, தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீட்டுக்கு செல்ல ஒரு மாதத்திற்கு இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரவீந்திரநாத் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் மனுதாரர் ரவீந்திரநாத் மற்றும் எதிர் மனுதாரர் மிலானி ஆகியோர் இரண்டு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால், ரவீந்திரநாத் எம்.பி பதவியை தொடரும் நிலை உருவாகியுள்ளது.