மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க இருந்த செய்தியாளர் சந்திப்பு மேடையின் பின்னணித் திரை இதுவரை 4 முறை மாற்றப்பட்டுள்ளதோடு, மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியும் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. காய்களை நகர்த்தி வருகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் இப்போதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எவை? என்பதை முடிவு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்துள்ளார்.
மதியம் 12 மணி அளவில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவிக்க இருப்பதாக கூறப்பட்டது. கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ள இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் 7 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. மேடைக்கு பின்னால் உள்ள எலக்ட்ரானிக் திரையில், தேசிய ஜனநாயக கூட்டணி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கவில்லை. பின்னர், மதியம் 1 மணி அளவில், அந்த டிஜிட்டல் திரையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஆங்கில வார்த்தை மாற்றப்பட்டு, வேறு டிசைன் வைக்கப்பட்டது. இதனால், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்களா?, அறிவித்தபடி தேசிய ஜனநாயக கூட்டணி அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது, மேடையில் போடப்பட்டிருந்த 7 நாற்காலியில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்பு இடம்பெற்றிருந்த பேனர் மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ள புதிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.