பத்து ஆண்டுகளாக அரசுப் பள்ளிக்கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று கூற உங்களுக்கு வெட்கமாக இல்லையா என காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தமது சமூக ஊடகப்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், தமிழ்நாட்டில், தமிழனாய் பிறந்து இருந்தாலும், தமிழருக்கெதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைக்கூலியாய் இருந்து கொண்டு, மோடி அவர்களை சந்தோஷப்படுத்தும் ஒரே நோக்கில் தமிழர் நலனுக்கு எதிராக செயற்படும் பண்ணையார் மனநிலையில் இருக்கும் அண்ணாமலை அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - இது பாஜக – ஆர்எஸ்எஸ் தமிழர் மேல் நடத்தும் ஒரு திட்டமிட்ட மொழி, இன மற்றும் கல்வி அடக்குமுறை என்று விமர்சித்திருந்தார். இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டமாக பதிலளித்துள்ளார்.
இது தொடர்பால அவர் வெளியிட்ட அறிக்கையில்:
இந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாகத் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். நேற்று நீங்கள் காணொளியில் கூறிய பொய்யையே மீண்டும் எழுத்து வடிவில் கூறுவதால் அது உண்மையாகி விடாது.
நகர்ப்புற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவது தானே நியாயமான சமூக நீதி. பத்து வருடமாக அரசுப் பள்ளிக் கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று கூற உங்களுக்கும் வெட்கமில்லை. உங்கள் கூட்டணிக் கட்சி தி.மு.க.வுக்கும் வெட்கமில்லை. இன்னும் எத்தனை ஆண்டு காலம், திராவிடத்தின் பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் பாடமாகப் படிக்க வேண்டும்?
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகன் தொடங்கி, அனைத்து தி.மு.க.வினர் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் நலனுக்காக, ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தாமல், இரட்டை வேடம் போட்டு, அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் தி.மு.க.வைக் கேள்வி கேட்க எது தடுக்கிறது? அவர்கள் தயவால் பெற்ற பதவியா? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.