திமுக நடத்தும் நாடக போராட்டத்திலாவது ஈபிஎஸ் கலந்து கொள்ளலாமே! -அமைச்சர் உதயநிதி
நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டம் நாடகமாகவே இருக்கட்டும்; அதிலாவது எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளலாமே என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து மதுரையில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், திமுக அரசின் உண்ணாவிரதப் போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி நாடகம் என்கிறாரே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, “நாடகமாகவே இருக்கப்பட்டும். அந்த நாடகத்தில் அவரும் வந்து கலந்து கொள்ளலாமே. அதிமுக-வும் நீட் வேண்டாம் என்று தானே சொல்கிறது.
நான் எளிமையான இரண்டு கேள்விகள் தான் கேட்டேன். நீங்களும் வாங்க. அல்லது உங்க கட்சியிலிருந்து யாராவது ஒரு பிரதிநிதியை அனுப்புங்க. இரண்டு பேரும் சேர்ந்து போராடுவோம். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் அதற்கான பலனைக் கூட நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். இதற்கு எடப்பாடி பழனிசாமி எதாவது பதில் சொன்னாரா?
ஆளுநருக்கு ஒரு கோரிகைதான் வைத்தேன். நீட் தேர்வை வைத்து அரசியல் பண்ணாதீர்கள். மாணவர்களின் வாழ்க்கை ரொம்ப முக்கியம் என்றேன். அதற்கு யாராவது கருத்துச் சொன்னார்களா?” என்றார் உதயநிதி.