கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்திய எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரின் செயலுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் பணியாற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியில் பேசும்போது வாடிக்கையாளர்கள் சிரமத்தைச் சந்திக்கின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிரா வங்கிகளில் இந்தியில் பேசிய வங்கி அதிகாரியை நவநிர்மாண் சேனா தொண்டர்கள் அடித்த சம்பவம் கூட நடந்தது.
பெங்களூருவிலும் அது போன்ற ஒரு மொழிப் பிரச்னை எஸ்.பி.ஐ. வங்கியில் ஏற்பட்டுள்ளது.
தெற்கு பெங்களூருவில் உள்ள சந்தாபுரா என்ற இடத்தில் செயல்படும் எஸ்.பி.ஐ. வங்கிக்குப் பெண் வாடிக்கையாளர் ஒருவர் சென்றார். அவர் அங்கிருந்த பெண் மேலாளரிடம் கன்னடத்தில் பேசினார். ஆனால் வங்கி மேலாளர் அந்த வாடிக்கையாளரிடம் இந்தியில் பேசினார்.
உடனே பெண் வாடிக்கையாளர் மேலாளரிடம் கன்னடத்தில் பேசும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் கன்னடத்தில் பேச மறுத்த மேலாளர், இது இந்தியா என்றும், இந்தியில்தான் பேசுவேன் என்றும் கூறி வாக்குவாதம் தெரிவித்தார்.
அதற்கு வாடிக்கையாளர் நீங்கள் கர்நாடகாவில் இருப்பதால் கன்னடத்தில் பேசித்தான் ஆகவேண்டும் என்று கூறினார்.
அதற்குப் பெண் மேலாளர், அதனால் என்ன என்றும், இது இந்தியா என்று கூலாகக் கூறினார். அதோடு எனக்கு நீங்கள் ஒன்றும் வேலை கொடுக்கவில்லை என்றும், கன்னடம் பேசமாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. வாடிக்கையாளர் தொடர்ந்து கன்னடத்தில் பேசினார். மேலாளர் இந்தியில் பேசி வாக்குவாதம் செய்தார்.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட வாக்குவாதம் சமூக ஊடகத்தில் வைரலாக பரவி இருக்கிறது.
இந்த நிலையில், வங்கி மேலாளரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்த மக்களை அலட்சியப்படுத்திய எஸ்.பி.ஐ வங்கி மேலாளரின் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. வங்கி ஊழியர்கள் அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும். மாநில மொழியில் பேச முயல வேண்டும். வங்கி ஊழியர்களுக்கு மாநில கலாச்சாரத்தை மொழியை மதிப்பதற்கு விழிப்புணர்வு வகுப்புகளை மத்திய நிதியமைச்சகம் நடத்த வேண்டும்” என கூறியுள்ளார்.