சேலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த உருவச்சிலையின் மார்பு மற்றும் கால் பகுதியில் மர்ம நபர்கள் கறுப்பு பெயின்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்.
சிலை மீது பெயின்ட் ஊற்றி அவமதித்தது யார்? காரணம் என்ன? என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய முதலமைச்சரின் தந்தையுமான கலைஞர் கருணாநிதியின் உருவ சிலை மீது கறுப்பு பெயிண்ட் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.