“பெரியாரை ஏற்றுக் கொள்ளும் தம்பிகள் கட்சியை விட்டு வெளியேறலாம்” - சீமான்

நாதக சீமான், தந்தை பெரியார்
நாதக சீமான், தந்தை பெரியார்
Published on

“உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள், பெரியார் வேண்டும் என்றால் என்னைவிட்டு வெளியேறிப் போய்விடலாம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு இயந்திரம் முழுமையாக திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இருந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகையை தக்க வைக்க இன்னும் 1,000 வாக்குகள் தேவை. அவ்வளவுதான். நாம் தமிழர் கட்சியினருக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் பெற்றது எங்களது சொந்த வாக்கு. திமுகவால் பணம் கொடுக்காமல் வாக்குகளைப் பெறவும் முடியாது. ஆனால் தனித்து வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை, அதிமுக, பாஜகவின் வாக்குகள் என முத்திரை குத்துகிறது திராவிடம். 15 கட்சிகளின் கூட்டணி வைத்து வாக்குகளைப் பெறுகிற திராவிடம்தான் இப்படி பேசுகிறது. பாஜகவினர் எதற்காக எனக்கு வாக்குகளை போட வேண்டும்? அதிமுகவோ பாஜகவோ நான் வளர வேண்டும் என விரும்புவார்களா? அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நிற்கிற எனக்கு எப்படி அவர்களது வாக்குகள் கிடைக்கும்?

என்னுடைய கோட்பாடு இந்திய மற்றும் திராவிட கட்சிகளுக்கு எதிரானது. நாங்கள் சத்தியத்தின் பக்கம் நிற்பவர்கள்; என்னால் முடியவில்லை எனில் எனக்குப் பின்னால் வரும் பிள்ளைகள் வெல்வார்கள்.

நான் திராவிடத்தில் இருந்து வந்தவன்; இப்போது தெளிவு பிறந்ததால் எதிர்க்கிறேன். ஏனெனில் அவர்கள் கொள்கைக்கானவர்கள் அல்ல; நம்மை கொள்ளையடிக்க வந்தவர்கள். பெரியாரை படித்துவிட்டு பேசுகிறேன்.. என் கேள்விக்குதான் பதில் சொல்ல வேண்டும்.

நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால் வரிகொடா இயக்கம் நடத்துவோம். ஆங்கிலேயர் ஆட்சியில்தான் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா? இப்போது நடத்த முடியாமல் போய்விடுமா என்ன?

பெரியார் என்பது எங்களுக்கு தேவை இல்லை. உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள், பெரியார் வேண்டும் என்றால் என்னைவிட்டு வெளியேறிப் போய்விடலாம்.” இவ்வாறு சீமான் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com