புதிய வரலாறு படைத்த பிட்காயின் விலை... திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?

பிக்டாயின்
பிக்டாயின்
Published on

பிட்காயின் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பிட்காயின் விலை இந்திய மதிப்பில் 1 கோடியே 4 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது

கடந்த சில மாதங்களாகப் பெரிய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த பிட்காயின், தற்போது மின்னல் வேகத்தில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கிரிப்டோ சந்தையின் எதிர்காலம் குறித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்த வளர்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அபாரமான விலை உயர்வுக்கு முக்கிய காரணம், உலக அளவில் பெரிய நிதி நிறுவனங்களும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும் பிட்காயினில் அதிக அளவில் முதலீடு செய்ய தொடங்கியிருப்பதுதான் என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிறுவனங்களின் வருகை பிட்காயினுக்கு ஒரு நம்பகத்தன்மையை வழங்கி, அதன் மதிப்பை உயர்த்தியுள்ளது.

மேலும், அமெரிக்க பங்குச் சந்தைகளில் சமீபத்தில் ஏற்பட்ட ஏற்றம், கிரிப்டோ சந்தையிலும் எதிரொலித்தது. அதேபோல், பிட்காயின் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் (ETF) முதலீடுகள் அதிகரித்ததும் இந்த உயர்வுக்கு பெரிய அளவில் பங்களித்துள்ளது.

பிட்காயினின் இந்த அதிரடி விலை உயர்வுடன், ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும் புத்துயிர் பெற்றுள்ளது. சந்தையில் உள்ள மற்ற முக்கிய கிரிப்டோ நாணயங்களான இத்தீரியம் (Ethereum) மற்றும் சோலானா (Solana) போன்றவையும் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது பிட்காயின் அல்லாத பிற சந்தைகளுக்கும் ஒரு நம்பிக்கையான சூழலை உருவாக்கியுள்ளது.

தற்போது பிட்காயினின் விலை 1,25,000 அமெரிக்க டாலர் வரம்பிற்கு மேல் நிலைத்திருக்குமா என்பதை முதலீட்டாளர்கள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையான வர்த்தகம் நீடித்தால், மேலும் பல முதலீடுகள் சந்தைக்கு வர வாய்ப்புள்ளது.

இந்தியாவில் பிட்காயின் மற்றும் பிற கிரிப்டோ நாணயங்கள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், அதிக பணம் படைத்த இந்தியர்கள் தொடர்ந்து பிட்காயின்களை பயன்படுத்தி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய இந்த சாதனை விலை உயர்வு, இந்திய முதலீட்டாளர்கள் மத்தியிலும் மிகுந்த கவனத்தையும், முதலீடு குறித்த ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com