இந்தியாவிலேயே கடந்த நிதியாண்டின் சரக்கு ஏற்றுமதியில் தமிழகம் 13.7% அதிகமாக ஏற்றுமதி செய்து, ஏற்றுமதியில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது.
மேலும், நாட்டின் இரண்டாவது பெரிய வணிகப் பண்டங்கள் ஏற்றுமதி செய்யும் மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஆகியுள்ளது.
இந்த நிதியாண்டில், உலகின் பொருளாதார நிலை நிச்சயமற்றதாகவும், சர்வதேசத் தேவைகள் குறைவாக இருந்தபோதிலும் தமிழகத்தின் மின்னணு உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரித்து காணப்பட்டது.
ஸ்மார்ட்போன், மின்னணுப் பொருட்களின் உற்பத்தி, ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சியால், தமிழகத்தின் ஏற்றுமதி 59.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஆட்டோமொபைல்கள், வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள், ஜவுளி, மருத்துவ சாதனங்கள் போன்ற துறைகளும் மாநிலத்தின் ஏற்றுமதி வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளன.
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியின் மதிப்பு 441.78 பில்லியன் டாலராகவும், சேவைகள் உட்பட மொத்த ஏற்றுமதியின் மதிப்பு 860.09 பில்லியன் டாலராகவும் உள்ளது.
இதற்கு முன்னர், குஜராத், மகாராஷ்டிரா ஆகியவை இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி மாநிலங்களாகத் திகழ்ந்து வந்தன. ஆனால், கடந்த நிதியாண்டில் அவற்றின் ஏற்றுமதி வளர்ச்சி மந்தம் அடைந்தன.
பெட்ரோலியப் பொருட்களைப் பெருமளவில் சார்ந்திருப்பதால், குஜராத்தின் சரக்கு ஏற்றுமதி 5% சரிந்தது. இதேபோல, மகாராஷ்டிராவும் 6.4% என்ற மிதமான வளர்ச்சியையே கண்டுள்ளது.
மாவட்டங்களில் 36.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகப் பண்டங்கள் ஏற்றுமதியுடன் பட்டியலில் குஜராத்தின் ஜாம்நகர் முதலிடம் பிடித்துள்ளது.
அடுத்தபடியாக, 26.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதியுடன் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தில் உள்ளது.