சமஸ்கிருத வளர்ச்சிக்கு கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு! - ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்!

சமஸ்கிருத வளர்ச்சிக்கு கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு! - ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்!
Published on

கடந்த பத்து ஆண்டுகளில் சமஸ்கிருத மொழியை மேம்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தது அம்பலமாகி உள்ளது.

இந்துஸ்தான் டைம்ஸ் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தரவுகளின் படி 2014 முதல் 2025 வரை மத்திய பா.ஜ.க. அரசு சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.2,533.59 கோடி செலவு செய்தது தெரிய வந்துள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு ஒதுக்கியதை விட 17 மடங்கு கூடுதல் நிதி சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆண்டுதோறும் சமஸ்கிருதத்திற்கு ரூ.230.24 கோடி ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு தமிழுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் பாஜக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ள மதுரை எம்.பி. வெங்கடேசன், “தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக வுக்கு ஓட்டுக்கு மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான்.

இது தான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி.” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com