தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022 ஆண்டு ஓய்வு பெற்ற தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டறிந்து, கல்விக் கொள்கையை இந்த குழுவினர் வடிவமைத்தனர்.
மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் தயாரானது. 2024 ஜூலை 1ஆம் தேதி தமிழக அரசிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கோ.வி. செழியன், அன்பில் மகேஷ், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர்.