தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பில் இருந்துவரும் ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவது உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, ’கம்யூனிஸ்ட்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்ட காரணத்தால் கொள்கை தோற்றுப்போய்விட்டது’ என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். கம்யூனிஸ்ட்டு தத்துவத்தின் மீது தலைவர்கள் வைக்கும் நம்பிக்கை குறைந்து விட்டது என்ற அவதூறுச் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”கடந்த 1989-90 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட்டு ஆட்சி வீழ்ந்ததும், இதனைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்களும் உலகளாவிய முக்கிய நிகழ்வகளாகும். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியும், இதர கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் விரிவான ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக வெளியிட்டுள்ளன. இவற்றை ஆ.ராசா சார்புநிலை தவிர்த்து கற்றறிந்து பேசவேண்டும்.” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
” ’கம்யூனிசம் பிறந்த இடத்திலேயே செத்துவிட்டது’, ’முதலாளித்துவத்துக்கு மாற்று இல்லை’ என்று தத்துவ எதிரிகள் கொக்கரித்துக் கொண்டிருந்த வேளையில், கலைஞர் ’சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்டது தோல்வி அல்ல; அது தற்காலிக பின்னடைவு மட்டுமே’ என்று கூறியதை ஆ.ராசா தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட்டுகளின் நேர்மையை, எளிமையை, தன்னல மறுப்பை, பொதுநல வேட்கையை, போராட்ட குணத்தை வர்க்க எதிரிகளும் ஒப்புக் கொள்வதை நாடறியும் என்பதை ஆ.ராசாவும் அறிந்திருக்க வேண்டும். போகிற போக்கில் “கம்யூனிஸ்ட்டுகள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டும் ஆ.ராசா, அவர் கண்டறிந்த கம்யூனிஸ்ட்டு சுயநலவாதிகள் பட்டியலை வெளியிட வேண்டும்.
கம்யூனிசம் என்பது வறட்டு தத்துவம் அல்ல, அது மனித குலம் நிறைவாக, நீடித்த அமைதியும், நிரந்தர சமாதானமும் நிலவும் முற்றிலும் புதுமையான சமூக அமைப்பில் வாழும் வாழ்க்கை முறை பற்றிய சமூக விஞ்ஞானம்.
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுதான் மனிதகுல வரலாறாகும். இதில் இயற்கை நிலை சமூகம் படிப்படியாக மாறி இன்று நிதி மூலதனமும், குழும நிறுவனங்களுமாக ஆதிக்கம் செலுத்தும் உச்சபட்ச ஏகாதிபத்திய சமுக அமைப்பாக வளர்ந்து, மீள முடியாத நெருக்கடியில் சிக்கி, சாவிலிருந்து தப்பித்துக்கொள்ள துடிக்கும் நோயாளியாக தவித்து வருகிறது.
சமூக நோயைக் குணப்படுத்தும் கம்யூனிசம் வெல்லும் எனும் காட்சியை ஆ.ராசாவும் காணும் காலம் வரும்.
உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு இல்லாத காலத்தில் பட்டியலின சமூகத்தில் இருந்து தலைவர்களை உருவாக்கி, நாடறிய உயர்த்தி பிடித்த கம்யூனிஸ்ட்டுகள் மீது, இட ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி தேடி, தேர்வுசெய்யும் நிலையில் இருக்கும் பகுத்தறிவாளர்கள் குற்றம்சாட்டுவது பொறுப்பற்ற செயலாகும். இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் என்கிற தலைமைப்பொறுப்பில் இருந்துவரும் ஆ.ராசா, இப்படி பொறுப்பற்ற முறையில் பேசி வருவது உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
’யாகாவாராயினும் நாகாக்க’ ” என்று இரா.முத்தரசன் காட்டமாகவும் கூறியுள்ளார்.