இயக்குநரும் நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதிச் சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெற உள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஏப்ரல் மாதத்தில்’. இந்தப் படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. அடுத்து தனுஷை வைத்து ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ஸ்ரீகாந்தின் ‘மெர்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஸ்டான்லி. கடந்த 2007 ஆம் ஆண்டு ஞான. ராஜசேகரன் இயக்கிய ' பெரியார் ' படத்தில் அறிஞர் அண்ணா கேரக்டரில் நடித்திருந்தார். ‘ராவணன்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சர்கார்’, ‘பொம்மை நாயகி’ என பல படங்களில் நடித்தவர் கடைசியாக ‘மகாராஜா’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஸ்டான்லி அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நடிகர் தனுஷ் மருத்துவ உதவிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
உடல்நிலை மோசமடைந்ததையடுத்து இன்று காலை எஸ்.எஸ்.ஸ்டான்லி உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதிச் சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.